Thursday, 24 March 2016
பௌத்தக் கோட்பாட்டு நோக்கில் சங்க இலக்கியம்
பௌத்தக் கோட்பாட்டு நோக்கில் சங்க இலக்கியம்
முனைவர் சு.மாதவன்
உதவிப் பேராசிரியர் - செம்மொழி விருதாளா்
தமிழாய்வுத்துறை
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த)
புதுக்கோட்டை 622001
பேச : 9751 330 855 மின் அஞ்சல் : www.semmozhi200269@gmail.com
ஒரு நூலெழுதத் தக்க தரவுத் தளங்கள் நிறைந்த தலைப்பு இது. ஒரு கட்டுரையளவில் இங்கு அணுகப்படுகிறது. தமிழ்ச் செவ்விலக்கியங்கள் உலகளாவிய மானுடப் பொதுமை சான்றது; பௌத்தமும் அவ்வாறானதே. இலக்கியங்களில் செம்மை உள்ளிட்ட கூறுகள் நிறைந்திருப்பதானது வாழ்க்கையிலும் அவை நிறைந்திருக்கக் கண்டோ நிறைந்திருக்க வேண்டி விரும்பியோ இயல்வன. தமிழ்ச் செவ்விலக்கியப் பெரும்பரப்பில், முதலில் கிடைத்துள்ள சங்க இலக்கியங்களான பாட்டும் தொகையும் சமயச் சார்பற்ற பாங்குடன் ஒளிர்ந்துமிளிர்வதை அறிஞர் பலரும் எடுத்துக்காட்டியுள்ளனர். ஏனெனில், நிறுவனமயப்பட்ட சமயமாக எந்தச் சமயமும் அக்காலத்தில் வளர்ந்திருக்கவில்லை. நம்பிக்கை – வழிபாட்டுக் கூறுகளே அவற்றில் இடம்பெற்றுள்ளன. சிவனியமோ மாலியமோ சைவ, வைணவச் சமயங்களாகத் தோற்றம் பெறவில்லை; கருக் கொண்டிருந்தன; வைதீக நெறியும் அவ்வாறானதே.
தமிழர் தம் திணைசார் வாழ்வியலில் பரத்தைமை நெறியும் போர்நிகழ் வெறியும் மிகுந்ததால் சமூகத்தின் அசைவியக்கம் நிலைகுலைந்து போயிருந்தது. இதனால் அகத்திலும் புறத்திலும் அறநெறிகள் தோன்றி வளர்ந்து கொண்டிருந்தன. இவ்வாறு, தமிழ்ச் சமூகம் தனக்கான அறநெறி விழுமியங்களைத் தன்னியல்பாகக் கட்டமைத்துக் கொண்டிருந்த வேளையில் வடஇந்தியாவிலிருந்து பௌத்தமும் சமணமும் நிறுவனப்பட்ட சமயங்களாகவே தமிழகத்துக்கு வந்து சேர்ந்தன. வந்துசேர்ந்த பௌத்த, சமண சமயங்களில் சமணம் கடுமையான பின்பற்றுநெறிகளைக் கொண்டிருந்ததால் நடுநிலையான பின்பற்றுநெறிகளைக் கொண்டிருந்த பௌத்தம் மக்களின் ஏற்புநிலையைப் பெற்றது. சங்க இலக்கியங்களில் சமணத்தைக் காட்டிலும் பௌத்தம் மிகுதியாக ஊடுருவி நிற்பதிலிருந்து இத்தகைய முடிவுக்கு வரலாம்.
இத்தகைய நோக்குநிலையிலிருந்து பௌத்தக் கோட்பாடுகள் சங்கத்தமிழிலக்கியங்களில் இடம்பெற்றுள்ள போக்குகளை இக் கட்டுரை தொட்டுக்காட்டத் தொடர்கிறது.
பௌத்தக் கோட்பாட்டுநிலைகள்
மனிதர்களின் சிந்தனைகளிலும் செயல்களிலும் இரண்டறக் கலந்திருப்பனவற்றைக் கோட்பாடுகள் என்கிறோம். அவை வாழ்வியலின் கருத்தியல்நிலையிலும் பண்பாட்டுநிலையிலும் தன்னியல்பாய் உருவானவையும் வந்து கலந்தனவையாகவும் அமைகின்றன. இத்தகைய கோட்பாடுகளை,
1. நம்பிக்கைகள் சார்ந்தவை
2. வழிபாடுகள் சார்ந்தவை
3. சடங்குகள் சார்ந்தவை
4. நடத்தை நெறிகள் /கடைப்பிடி நெறிகள் சார்ந்தவை
என்ற நான்கு வகைகளுக்குள் அடக்கலாம். இவற்றுக்குள் பௌத்தக் கோட்பாடுகளாக எவைஎவை தொழிற்பட்டன என ஆராயலாம்.
சங்க காலப் பெயர்களில்…
சங்க கால வாழ்வியலின் ஊடாகச் சில வழக்காறுகளின் மூலக்கூறுகளின் பதிவுகள் தென்படுகின்றன. மனித வாழ்வியலில் ஒரு சமூகத்தின் சிந்தனைகள் முதலில் தொழிற்படும் இடம் குடும்பம். குடும்பத்தின் ஓர் அலகு தனிமனிதன். ஒரு குடும்பம் எத்தகைய வாழ்வியல் சிந்தனைகளைக் கொண்டிருந்தது என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பவை மனிதர்களின் பெயர்கள்.
மனிதர்களின் பெயர்களில்தான் அந்தச் சமூகத்தின் பன்முகச் சிந்தனை விதைகள் தெளிக்கப்பட்டிருக்கும். இத்தகைய நோக்கில், சங்ககால மானிடர்களின் பெயர்களில் பௌத்தச் சுவடுகள் தென்படுமாற்றை அணுகலாம்.
பொதுவாக, எவரொருவர் பெயருமே அவரவர் சார்ந்த மொழி, தொழில், சமயம், சமூகம், மெய்யியல் ஏதேனும் ஒன்றின் கருத்தியல் சார்பைப் பின்புலமாக்க் கொண்டு விளங்குகின்றது. சங்கப் புலவர்களின் பெயர்களும் அவ்வாறே அமைந்துள்ளன. அரிசில் கிழார், ஆலந்தூர் கிழார், ஆவூர் கிழார், ஆவூர் மூலங்கிழார், இடைக்குன்றூர் கிழார் முதலான பெயர்கள் இவர்கள் நிலவுடைமையாளர்களாய் இருந்துள்ளனர் என்பதையும், உறையூர் மருத்துவன் தாமோதரனார், ஒரேருழவர், தங்கால் பொற்கொல்லனார், மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் முதலான பெயர்கள் இவர்கள் வணிகர்களாக இருந்துள்ளனர் என்பதையும் கட்டி நிற்கின்றன. இதைப்போலவே இளம்போதியார், சங்க வருணர், சிறுவெண் தேரையார், தேரதரன் ஆகிய பெயர்கள் இவர்கள் பௌத்தச் சார்புடையவர்களாய் இருக்கக் கூடும் என்பதை வெளிப்படுத்துகின்றன.
‘ஐயாதி சிறுவெண்தேரையார்’ என்னும் புலவருக்கு மனிதனின் நன்னடத்தைக்கும் நல்வாழ்க்கும் மூலமான ஐந்து நன்னெறிகளைப் பின்பற்றியவர் என்னும் பொருளில் அதாவது பௌத்தப் பஞ்சசீலங்களைப் பின்பற்றியவர் என்னும் பெயரில் பெயரிடப்பட்டிருக்கலாம்; பெயரிட்டுக் கொண்டிருக்கலாம்.
‘குண்டுகட் பாலியாதனார்’ என்னும் புலவர் பெயரில் உள்ள ‘பாலி’ என்னும் சொல் புத்தரின் தாய்மொழியும் பௌத்த மெய்யியல்களின் மூலமொழியுமான ‘பாலி’ மொழியைக் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. இவரது பெயரின் முன்னொட்டான “குண்டுகட்’ என்பதும் ‘Kuntakal’ என்னும் இன்றைய ஆந்திர மாநில ஊரைச் சுட்டுவதாகலாம். ‘Kuntakal’ என்னும் இவ்வூர் சங்க காலத்தில் தமிழகத்து ஊர்களுள் ஒன்றாக நிலவியதே என்பதும் பொருத்தமாகவே உள்ளது. எனவே, ‘குண்டுகட் பாலியாதனார்’ என்பவர் ‘முரவெயமயட’ ஊரைச் சேர்ந்த பாலிமொழியறிந்த பௌத்தத் துறவியாகலாம். மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், கோவூர்கிழார், என்பது போலவே இப்பெயராகும். மேலும், சங்ககாலப் புலவா்கள் “சாத்தன்” என்னும் பின்னொட்டு பெயர்களில் 84 பாடல்களைப் பாடியுள்ளார். உறையூா் முதுகண்ணன் சாத்தனார் 5 பாடல்களும் சாத்தந்தையார் 4 பாடல்களும் பெருந்தலைச் சாத்தனார் 6 பாடல்களும் மடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார் 2 பாடல்களும், ஒக்கூர் மாசாத்தனார், ஒக்கூா் மாசாத்தியார் (பெண்), கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார், மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், மோசிசாத்தனார், ஆடுதுறை சாத்தனார் ஆகியோர் ஒரு பாடல்கள் வீதம் மொத்தம் 10 புலவா்கள் 23 புறநானூற்றுப் பாடல்களைப் பாடியுள்ளனா். “சாத்தன்” என்னும் சொல்லுக்குப் பெருமாலும் அகராதிகள் “புத்தன்”, “தெரிவிக்கின்றவன்” என்ற பொருளைத் தருகிறது. ஆகவே, “சாத்தனார்” என்னும் பின்னொட்டு பெயருள்ள புறநானூற்றுப் புலவா்கள் “புத்தரின் கருத்தினைத் தெரிவிப்பார்கள்” என்று பொருள் கொள்ளலாம் (அறிவுராஜ்., ந. 2013 : 89).
சங்க இலக்கியங்களில்...
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களுள் பௌத்தக் கோட்பாடுகள் மிகுதியாக இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு ஆகும். சமயம் என்பது தமிழர் மரபின் பகுப்புப்படி புறம் சார்ந்தது. எனவே, புறநானூற்றில் சமயக்கோட்பாடுகள் இடம்பெறுவது இயல்பே
புறநானூற்றில் 360-வது பாடலாக அமைந்துள்ள பாடலை இயற்றியவர் பெயர் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், கிடைத்துள்ள பாடலில் பௌத்தச் சார்புடைய சிந்தனைகள் இடம்பெற்றுள்ளமை அறியலாகிறது. அப்பாடல் வருமாறு:
“பெரிது ஆராச் சிறு சினத்தர்
சில சொல்லால் பல கேள்வியர்
நுண்ணுணா்வினாற் பெருங் கொடையா்
கலுழ் நனையால் தண் தேறலா்
கனி குய்யாற் கொழுந் துவையர்,
தாழ் உழந்து தழூஉ மொழியர்
பயன் உறுப்பப் பலா்க்கு ஆற்றி
ஏமமாக இந்நிலம் ஆண்டோர்
சிலரே பெரும் கேள் இனி நாளும்,
பலரே தகை அஃது அறியாதோரே
அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது
இன்னும் அற்று, அதன் பண்பே அதனால்
நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை பரிசில்
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி
அச்சுவரப் பாறுஇறை கொண்ட பறந்தலைமாக
கள்ளி போகிய களரி மருங்கின்,
வெள்ளில் நித்த பின்றைக் கள்ளொடு
புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி,
புலையன் ஏவப் புன்மேல் அமருந்துகொண்டு,
ஆழல்வாய்ப் புக்க பின்னம்,
பலர்வாய்த்து இரா அர், பகுத்துஉண்டோரே?
(புறநா. 360)
(மேற்கோள், அறிவுராஜ்., ந. 2013 : 90)
இப் பாடல் மூன்று கருத்துக்களை முன்வைக்கிறது. அவை வருமாறு:
1. செல்வமும் மன்னி நில்லாது – (செல்வம் நிலையில்லாதது) செல்வம் நிலையாமை
2. அற்று அதன் பண்பே - இற்று இதன் பண்பே (நாலடி)
உயிரில்பொருள், உயிருள்பொருள் இரண்டின் பண்புகளும் நிலையில்லாததாகவே உள்ளது.
உயிர் நிலையாமை, யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை
3. நிச்சமும் ஒழுக்கமும் முட்டிலை – நாள்தோறும் ஒழுக்கத்தில் குறையாது வாழ வேண்டும் - ஒழுக்கத்தின் இன்றியமையாமை
இப் பாடலில் இடம்பெற்றுள்ள கருத்துக்களைத் தொகுத்தால் நிலையாமை நிலைப்பு என்பதாக, அதாவது நிலையாமை என்னும் நிலையறிந்து நிலைப்புமிக்க வாழ்க்கைக்குரிய நல்லொழுக்க நெறிகளை விழிப்போடு பின்பற்ற வேண்டும் என்னும் கருத்தை வழங்குகிறது. வாழ்க்கைகக்குச் செல்வம் தேவை என்றாலும் செல்வம் நிலையில்லாதது, வாழ்க்கை நிலைக்கும் என்று எண்ணினால் வாழ்க்கையை மனிதன்வழியாக நிகழ்த்தும் உயிர் நிலையில்லாதது, உயிர்நிற்கும் யாக்கை நிலையில்லாதது யாக்கையில் தோன்றும் இளமை நிலையில்லாதது என்று எல்லாம் நிலையில்லாதனவாய் உள்ளன என்பதால் வாழ்க்கை நிலையாமையை உணர வேண்டும். அவ்வாறு, உணர்ந்தால் இந்த உயிர், உடல், இளமை, செல்வம் என்ற நிலையில்லாத நான்கையும் பெற்றுள்ள மனிதன் அவனது வாழ்க்கைக்குப் பிறகும் நிலைத்துப் பிறராலும் பின்பற்றப்பட்டுப் புகழப்படுவதாக அமைவன நல்லொழுக்க நெறிகளே என்ற முடிவுக்கு வரலாம். இவ்வாறான, காரணகாரிய இயைபைக் கொண்டு விளங்குகிற இப் பாடலுக்குள் பௌத்தச் சார்புநிலைக் கோட்பாடு இடம்பெற்றிருப்பதாகப் படுகிறது. பௌத்தப் பிடகங்களுக்குள்ளிலிருநது பொருத்தமான ஒப்பிட்டுப் பகுதி கிடைத்தால் இதுகுறித்த அழுத்தமான முடிவுக்கு வரலாம்.
இன்னொரு பாடலான புறநானூறு 363 ஐ இயற்றியவர் ஐயாதிச் சிறுவெண்டேரையர் ஆவார். இவரது பாடல் வருமாறு:
“இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
தாமே ஆண்ட ஏமம் காவலர்
இடுதிரை மணலிலும் பலரே சுடுபிணக
காடுபதியாகப் போகித், தத்தம்
நாடு பிறர்கொளச் சென்று மாய்ந்தனரே
அதனால் நீயும் கேண்மதி அத்தை வீயாது
உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
மடங்கல் உண்மை மாயமோ அன்றே
கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்,
உப்பிலாஅ அவிப்புழுகல்
கைக்கொண்டு, பிறக்கு நோக்காது,
இழி பிறப்பினோன் ஈயப் பெற்று,
நிலங்கலனாக, இலங்குபலி மிசையும்
இன்னா வைகல் வாரா முன்னே,
செய்ந்நீ முன்னிய வினையே,
முந்நீா் வரைப்பகம் முழுதுடன் துறந்தே” (புறநா. 363)
(மேற்கோள், அறிவுராஜ்., ந. 2013 : 91)
இப்பாடலின் ஒட்டு மொத்தக் கருத்தாகத் துறவுநெறிக் கருத்தமைவும் உட்செறிகருத்தாக நிலையாமைக் கருத்தியலும் இடம்பெற்றுள்ளன. உயிர் நிலையாமை அறிந்து ஒழுகவேண்டும் என்பதை உணர்த்துகிறது இப்பாடல். இப்பாடலும் பௌத்தச் சார்புநெறி பேசுகிறது எனலாம்.
ஒளவையாரின் புறநானூற்றிப் பாடல் 187 பௌத்த மெய்யியல் - அறவியல் நூலான தம்மபதச் சுலோகம் 98ன் நேரடி மொழிபெயர்ப்பாக உள்ளதைத் தெ.பொ.மீ. மு.கு.ஜகந்நாதராஜா ஆகியோர் ஆராய்ந்து நிறுவியுள்ளனர்.
ஔவையார் பாடிய புறநானூற்றுப் பாடல் (187) பௌத்த மெய்யியல் – அறவியல் நூலான தம்மபத்தின் நேரடி மொழிபெயர்ப்பாக விளங்குகிறது என்பதைத் தெ.பொ.மீ., மு.கு.ஜகந்நாதராஜா ஆகியோர் ஆராய்ந்து நிறுவியுள்ளனர். அப்பாடல் வருமாறு
“நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”
இப்பாடல் சொல்லுக்குச் சொல் அப்படியே தம்மபத்த்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்பதை உறுதிப் படுத்தும் பாலி மொழிப்பாடல் வருமாறு
“காமே வா யதி வா ராஞ்ஞே
நிஞ்னே வா யதி வாதலே
யத்தா ரஹந்தோவி ஹரந்தி
தங் பூமிங் ராம ணெய்யகங்” (தம்மபதம், 98)
இப்பாடலின் சொற்பொருள் கீழ்க்கண்டவாறு அமைகிறது.
காமே வா நாடாக இருந்தாலும்
யதி அல்லது
ரஞ்ஞே வா காடா இருந்தாலும்
நிந்னே வா பள்ளமாக இருந்தாலும்
யதி அல்லது
தலேவா மேடாக இருந்தாலும்
யத்து எங்கே
அரஹந்தோ சான்றோர்கள்
விஹரந்தி நடமாடுகிறார்களோ
தங் அந்த
பூமிங் நிலமானது
ராமணெய்யகங் எழில்நலமுடையதாகும்
(மு.கு.ஜகந்தராஜா இந்திய மொழிகளில் ஒப்பிலக்கி
யம் 1994 ப.24)
ஆக, தம்மபதப் பாடலின் பொருள்,
“நாடாக இருந்தாலும் காடாக இருந்தாலும்
பள்ளமாக இருந்தாலும் மேடாக இருந்தாலும்
எங்கே சான்றோர்கள் நடமாடுகின்றார்களோ
அந்த நிலமானது எழில் நலமுடையதாகும்”.
என்பதாகும். எனவே, புறநானூறு – தம்மபதப் பாடல்களின் சொல்லமைப்பும், கருத்தமைவும் ஒருங்கே ஒத்திருப்பதைக் காண முடிகிறது. இங்கு ஒரு வினா எழுவது இயல்பு. அதாவது, ஔவையார் தம்மபத்த்தைப் படித்துவிட்டு மொழிபெயர்த்தாரா? புத்தர் ஔவையாரைப் படித்துவிட்டு மொழிபெயர்த்ரா? என்பதே அவ்வினா, புத்தர் ஔவையாரின் காலத்துக்கு முந்தியவர் என்பதாலம், அவர் ஒரு மெய்யியல் நிரமாணிப்பாளர் என்பதாலும் பத்தரின் போதனைகள் தொகுக்கப்பட்டுப் பரப்பப்பட்ட காலத்தில் ஔவையார் இதை அறிந்திருக்கக்கூடும் என்பதே பொருத்தமானதாகும். அசோகனின் மூன்று கல்வெட்டுகளில் அதியமான் இடம் பெற்றிருப்பதும், அதியமானின் அவைக்களப்புலவராக ஔவையார் திகழ்ந்திருப்பதும் நம் ஊக்கத்தை உறுதி செய்கின்றன. (மாதவன்.,சு 2005 : 106 - 107 )
இதேபோல் பௌத்தச் சக்கரமான அசோக தருமச் சக்கரத்தின் வழக்காற்றை ஏற்பதாகப் புறநானூறு 175 ஆம் பாடலும் அதனை மறுப்பதாகப் புறநானூறு 233 ஆம் பாடலும் உள்ளதை சு.மாதவன் ஆராய்ந்து நிறுவியுள்ளார்.
பௌத்த தருமச் சக்கரம் ஏற்பும் எதிர்ப்பும்
ஏற்பு
பௌத்த தருமச் சக்கரத்தின் இயல்பையும், பெருமையையும் விவரிக்கும் தீகநிகாயத்தின் “தம்ம சக்கப் பவத்தன சூக்தம்” என்ற பகுதிக்கு ரைசுடேவிட்சு தரும் விளக்கம் வருமாறு.
தருமச்சக்ரத்தை உருட்டுவது என்பது பௌத்தக் கோட்பாட்டின்படி, அதன் போதனைகளைச் செயல்படுத்துவது என்பதையே சுட்டும். பாலிமொழிகளில் “சக்க” எனப்படும் “சக்கரம்” மக்கள் வழக்கில் உள்ள ஒன்றைக் குறிப்பது ஆகாது. இது இறையாண்மையைச் சுட்டுவது. “சக்கரத்தைச் சூடியவன்” எனப்படும் “சக்கரவர்த்தி” என்ற சொல்லும், எதிர்ப்பின்றி, தனது தேரின் சக்கரத்தை உலகம் முழுவதும் உருட்டிச் செல்லும் “உலகப்பேர்ரசன்” என்ற கருதுகோளைக் குறிப்பது ஆகும் . “தம்ம்ம்” எனப்படும் அறம் (தருமம்) என்ற சொல், வெறும் சட்ட வடிவத்தைச் சுட்டவில்லை, மாறாக, வேறு எம்மொழியிலும் மொழிப்யெர்க்க முடியாத உண்மை நேர்மை ஆகிய உயர் அறங்களைச் சுட்டி நிற்பதாகும். சுருங்க்க கூறின், தம்ம்ம் என்பது புத்தரின் கோட்பாட்டை முழுமையாக உணர்த்தி நிற்கின்றது. பிரவர்த்தனா (பாலி பவ்வத்தனா) என்பது, ”என்றும் நிலையாக இயங்கிக் கொண்டிருக்கும்” தன்மையை உணர்த்தி நிற்கின்றது. எனவே, இத்தொடரின் முழுப்பொருளும் இதுதான் “உலகம் பேரரசன் தன் இறைமாட்சியின் அடையாளமாகிய தேரை – சக்கரத்தை – இயங்குகிறான் என்பதன் மூலம் உண்மையையும், நேர்மையையும் என்றும் புரந்து வருகிறான்”.
(மேற்கோள், பேரா.க.நெடுஞ்செழியன், இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும், 1989, ப.95-96)
இவ்விளக்கத்திலிருந்து நான் பெறும் கருத்துக்களாக,
1. தருமச் சக்கரம் என்பது புத்தரின் போதனைகளின்படி ஆளும் அரசாட்சியின் தன்மையைச் சுட்டும் குறியீடு ஆகும்.
2. இத்தகைய ஆட்சியின் தன்மைகள் உண்மையும், நேர்மையும் ஆகும்.
எனக் கொள்ளலாம். இந்த பௌத்த மெய்யியல் வரையறைகளோடு புறநானூற்றில் கள்ளில் ஆத்திரையனாரால் எழுதப்பட்டுள்ள ஆதனுங்கனின் ஆட்சிச் சிறப்பு பற்றிய பாடலை ஆராய வேண்டியுள்ளது.
புறநானூற்றில் 175வதாக அமைந்துள்ள கள்ளில் ஆத்திரையனார் பாடல்,
“எந்தை! வாழி, ஆதனுங்க! என்
நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே
நின் யான் மறப்பின் மறக்கும் காலை
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும்,
என்யான் மறப்பின், மறக்குவென் வென்வேல்
விண்பொரு நெடுங்கடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்ஏத் திகிரி திரிதரக் குறைந்த
உலக இடைகழி அறைவாய் நிலைஇய
மலர்வாய் மண்டிலத்து அன்ன, நாளும்
பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே”.
என்பதாகும்.
இப்பாடலில் இடம்பெறும் “மலர்வாய் மண்டிலம்” என்பது ஆதனுங்களின் ஆட்சி அறத்திற்கு உவமிக்கப்பட்டுள்ளது என்றும், புத்த ஜாதக்க் கதையில் நல்லாட்சியின் அடையாளமாக்க் குறிக்கப்படும் ஜாதக்க் கதையில் நல்லாட்சியின் அடையாளமாக்க் குறிக்கப்படும் “ஒளிவட்டமே” திகிரியாக – மலர்வாய் மண்டிலாக – உருவகிக்கப்படுகின்றது என்றும் பேரா.க.நெடுஞ்செழியன் நிறுவியுள்ளார். இம்முடிவை உறுதிப்படுத்துவதற்கு இப்பாடலில் இடம்பெறும் இன்னொரு பௌத்தக் கருத்தும் இங்கு ஆய்தற்கியது.
பௌத்தத் தத்துவம் கீழ்க்கண்ட நான்கு நிலைகளில் இதர மெய்யியல் பிரிவுகளினின்று வேறுபட்டு நிற்கிறது
1. கடவுளை ஏற்றுக் கொள்ளாமலிருப்பது
2. ஆன்மாவை நிரந்தரமானதென்று ஒப்புக் கொள்ளாமலிருப்பது
3. எந்த ஒரு நூலையும் கடவுள் அருளியதாக ஒப்புக்கொள்ளாமல் இருப்பது.
4. வாழ்விகன் பிரவாகத்தைத் தற்போதைய உடலுக்கு மட்டுமே சொந்தமாகக் கருதாமலிருப்பது.
(ராகுல்சாங்கிருத்தியாயன், பௌத்த்த் த்த்துவ இயல், 1985, ப.1)
மேற்கண்ட நான்கு அடிப்படை மெய்யியல் நோக்குநிலைகளில் இரண்டாவது கருத்தை வலியுறுத்திக் கூறுவதாக்க் கள்ளில் ஆத்திரையனாரின் இப்பாடல் அமைந்துள்ளது. அதாவது,
“நின்யான் மறப்பின், மறக்கும் காலை
என்உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும்
என் யான் மறப்பின் மறக்குவென்....”
என்ற பாடலடிகள் சிந்தனைக்குரியவை.
“உன்னை நான் மறக்கமாட்டேன். அவ்வாறு நான்
மறப்பேனாயின் அது எப்பொழுது நிகழும் தெரியுமா?
என் உயிர் உடலைவிட்டுப் பிரியும் பொழுதும்
என்னையே நான் மறக்கும் பொழுது நேர்ந்தாலும்தான்
உன்னை நான் மறப்பேன்”
என்பது இவரிகள் பொருளாகும்.
உடலைரவிட்டு உயிர் பிரிந்தபிறகம் எண்ணங்களைச் சுமந்தபடி அகண்ட வெளியில் உயிர் உலவும் என்பது வைதிகச் சமயங்களின் நம்பிக்கை. ஆனால், உடலைவிட்டுப் பிரிந்த உயிர் எங்கும் நிலை கொள்வதில்லை அது அழிந்து போகிறது என்பது பௌத்த மெய்யியல் நிலைப்பாடு. இப்பாடலில் இடம்பெறும் கருத்தும், உடலைவிட்டு உயிர் பிரிந்த பிறகு நினைவொழந்து போகும் என்பதை வலியுறுத்துகிறது. எனவே, இப்பாடல் பௌத்த மெய்யியலைச் சார்ந்து என்பதை உறுதிபடுத்த முடிகிறது.
எதிர்ப்பு
கல்லில் ஆத்திரையனார் தருமச் சக்கரத்தை மலர்வாய் மண்டிரமாக உவமித்து பௌத்த சிந்தனை பரவியிருந்த நிலையை உணர்த்துகிற, அதே புறநானூற்றில் இடம் பெற்றுள்ள வெள்ளெருக்கிலையார் பாடலில் பௌத்த மரபை எள்ளி நகையாடும் சிந்தனைப் போக்கும் பதிவாகியுள்ளது. வெள்ளெருக்கிலையார் என்ற இவரது பெயரிலிருந்து இவர் சிவனிய நெறியினராக இருக்க்க்கூடும் என்றும், அதனால் சிவனியநெறி வளரத் தடையாய் விளங்கிய பௌத்த மரபைப் புறந்தள்ளியுள்ளார் என்றும் கொள்ள இடம் உண்டு.
புறநானூற்றில் 233ஆவதாக இடம்பெற்றுள்ள இவரது பாடல் வருமாறு
“பொய்யா கியரோ பொய்யா கியரோ
பாஅடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர்கெழு நோன்தாள் அகுதைக்கண் தோன்றிய
பொன்புனை திகிரியின் பெய்யா கியரோ
இரும் பாண் ஒக்கற் தலைவன், பெரும்பூண்,
போர் அடு தானை, எவ்வி மார்பின்
எஃகுறு விழுப்புண் பல என
வைகுறு விடியல், இயம்பிய குரலே”
இப்பாடலில் இடம் பெற்றுள்ள,
“............ அகுதைகண் தோன்றிய
பொன்புனை திகிரியின் பெய்யாகியரோ”
என்ற தொடர் பௌத்த மரபை எள்ளும் தன்மைத்து என்பதைப் பேரா.க.நெடுஞ்செழியன் சுட்டியுள்ளார். அவரது கருத்து வருமாறு
“தம்ம சக்க பவத்தன சூத்கம் தேரைப் பற்றிக் குறிப்பதைப் போன்றே, சாதக்க் கதையில் வரும் “சக்கவத்தி சூத்கம்” நல்லாட்சி புரியம் அரசனின் அரண்மனையில் தோன்றும் “ஒலிவட்டம்” பற்றி விளக்கும். “அவ்வொளிவட்டம் வழிகாட்ட, ஓர் அரசன் அது செல்லும் வழியைப் பின் தொடர்நது ஆகிய குற்றங்களிலிருந்து காத்தான்” என்று அச்சாதகத் கதை கூறுகிறது. நல்லாட்சியின் அடையாளமாக, மன்னனின் அரண்மனை முன்பாக நின்று ஒளிவிடும். இவ்வொளி வட்டம் ஆட்சியின் குறைவு ஏற்படும்போது அது தானகவே மறைந்துவிடும் என்பாது பௌத்த மரபு. இத்தகைய நம்பிக்கை உண்மைக்கு மாறானது என்பது போன்ற குறிப்பும் புறநானூறு 223ஆம் பாடலால் அறிய முடிகிறது.... இப்பாடலைப் பாடிய் வெள்ளொருக் கிலையார் பௌத்த சமய எதிர்ப்பாளராகலாம்” (இந்தியப் பண்பாட்டில் தமிழும், தமிழகமும் 1989, ப.99)
கள்ளில் ஆத்திரையனார், வெள்ளொருக்கிலையார் ஆகிய இருவரது பாடலையும் ஒப்பிட்டு நோக்குகையில் சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்த பௌத்த மெய்யியல் ஏற்பையும், எதிர்ப்பையும் உய்த்துணர முடிகிறது. சங்க காலம் சமயப் பொறைமிக்கது என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய வண்ணம் பௌத்த சமய எதிர்ப்பு இருந்திருப்பதையும் அறிய முடிகிறது (மாதவன்.,சு.2005 : 107 – 112).
முடிவுகளாக
பத்துப்பாட்டு நூல்களுள் ஆங்காங்கே பௌத்த வழக்காறுகள் தென்படுகின்றன. மதுரைக் காஞ்சி எனும் நூல் பௌத்த விகாரையில் பௌத்த உபாசகர்கள், உபாசகிகள் பூவைத்து வழிபட்டசெய்தியைக் குறிப்பிடுகிறது.
நெடுநல்வாடை எனும் நூலில் ‘பிடகம்’ என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இச் சொல் பௌத்தத் திரிபிடகத்தைக் குறிப்பதாகலாம்.
இதுகாறும் ஆய்ந்த நிலையிலிருந்து கீழ்கண்ட முடிவுகளைத் தொகுக்கலாம்.
1. பௌத்தப் பிடக்க் கருத்தை முற்றாக ஏற்கும் அளவிற்குத் தமிழகத்தில் பௌத்தம் பரவி இருக்கிறது
2. வைதிக மரபுக்கு முற்றிலும் எதிரான பௌத்த மெய்யியலின் ஆன்மா மறுப்பு புறநானூற்றில் பதிவாகி இருப்பது பௌத்தம் தமிழகத்தில் கொண்டிருந்த பிடிமானத்தை வெளிப்படுத்துகிறது.
3. பௌத்த மெய்யியலுக்கு எதிரான சிந்தனைப் பள்ளி ஒன்று உக்கிரமான கருத்தியல் தாக்குதலை அதன்மீது செலுத்தி இருப்பதால் சங்க காலம் சமயப்பொறை மிக்க காலம் என்கிற கருத்து மறுபரிசீலனைக்கு உரியதாகிறது.
4. பௌத்த மெய்யியல் பின்புலத்தோடு சங்க இலக்கியத்தை ஆராய்ந்தால் பல புதிய வெளிச்சங்கள் கிடைகக்கூடும்.
******
• செம்மொழிப் பயிலரங்கம், குந்தவைநாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, தஞ்சாவூர், ஜனவரி 2015 (21 – 30)
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் படைப்புகள் – வகைமையியல் பார்வை
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் படைப்புகள் – வகைமையியல் பார்வை
Kidth; R.khjtd;>
cjtpg; Nguhrphpah; - A[prp MHV (2014-2016)>jkpoha;Tj;Jiw>
khl;rpik jq;fpa kd;dh; fy;Y}hp (j)> GJf;Nfhl;il 622001> Ngr : 9751 330 855
kpd; mQ;ry; :semmozhi200269@gmail.com, semmozhi_200369@yahoo.com
‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்’ என்றதுமே ச.தமிழ்ச்செல்வன், மேலாண்மை பொன்னுசாமி, அருணன், பாரதி கிருஷ்ணகுமார் மதுக்கூர் இராமலிங்கமெல்லாம் இருக்காங்களே… அந்தச் சங்கம் தானே! என்று எல்லோரும் கேட்கும் அளவுக்குச் சங்கமும் தானும் இரண்டறக் கலந்த ஒரு படைப்புப் போராளி – போர்ப்படைப்பாளி எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன். மரபும் இயல்புமே போர்க்குணப் பின்னணியாகக் கொண்டவர் அவர். அவரது படைப்புகளில், “வாளின் தனிமை” என்ற ஒரு சிறுகதையை மட்டும் வைத்துக்கொண்டே பெருங் கதைக்கட்டுரை ஒன்றை எழுதிவிடமுடியும். அவ்வளவு உணர்வு, உணர்ச்சி, கிளர்வு, கிளர்ச்சி என மானுட இயல்புகளும் அதில் கொட்டப்பட்டுள்ளன. மொழிநடை, வழக்காறுகள், உத்திகள் என இலக்கிய இயல்புகளும் அதில் எட்டப்பட்டுள்ளன. ச.தமிழ்ச்செல்வனின் மொழி, உணர்வின் விழியாக வெளிப்பட்டு அத்தனை உணர்வுநிலைகளையும் நமக்குள் கொண்டுவந்து சேர்க்கிறது. இத்தகைய நுட்ப திட்ப ஒட்பச் செறிவார்ந்த படைப்பாளியின் படைப்புகளை விரிவார்ந்த ஆய்வுகளாகப் பின்னர் நிகழ்த்திக் கொள்ளலாம் என்று கருதி, இந்தக் கட்டுரை அவரது படைப்பாக்கங்களாகியுள்ள எழுத்தாக்கங்களை வகைமையியல் பார்வையில் எடுத்துரைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
ச.தமிழ்ச்செல்வன் பிறப்பும் சிறப்பும்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்திலுள்ள நெ.மேட்டுப்பட்டியில் மே.சு.சண்முகம் – சரஸ்வதி இணையரின் மகனாகப் பிறந்தவர். ச.தமிழ்ச்செல்வன் (27.05.1954). இவரது சகோதரர்கள் கோணங்கி, ஒரு சிறந்த ஊர்சுற்றி; படைப்பாளி. முருகபூபதி ஒரு நவீன நாடகக்காரர்; படைப்பாளி. இவரது தந்தை மே.சு.சண்முகம் அவர்களும் மகன்களைத் தொடர்ந்து படைப்பாளியாக மலர்ந்தவர்; சிறப்பு புதினப் படைப்பாளி.
இவரது தாய்வழித் தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ், ஒரு சிறந்த நாடகப் படைப்பாளி; நாடகப் பாடலாசிரியர்; இயக்குநர்; எல்லாவற்றுக்கும் மேல் அவர் ஒரு மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர். தமிழின் முதல் பேசும்படமான காளிதாஸ் படத்துக்குப் பாடல்கள் எழுதியவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இவர் இந்திய இராணுவத்தில் வீரராகப் பணிபுரிந்து, மக்கள் போராட்டக் களப் பணியாற்றுவதே அதைவிடவும் சிறந்தது என்று தன் இராணுவப் பணியை உதறிவிட்டு வந்தவர். சிலர் எழுத்தாளராக இருப்பர்; போராளியாக இரார். சிலர் போராளியாக இருப்பர்; எழுத்தாளராக இரார். இரண்டுமாக இருப்பவர்கள் குறைவு. இரண்டிலும் மிளிர்பவர்கள் மிகக் குறைவு. மிளிர்வதோடு தன் எழுத்தின்படி தானே வாழ்பவர்கள் மிகமிகக் குறைவு. அத்தகைய மிகச் சிலரில் ச.தமிழ்ச்செல்வனும் ஒருவர்.
படைப்புலகில் முதல் கவிதையும் முதல் சிறுகதையும்
படைப்புலகில் இவரது முதல் பதிவு கவிதையே ஆகும். பெரும்பாலும் எல்லாப் படைப்பாளிகளுமே கவிதையில் தொடங்கிப் பின்னர் பிற இலக்கிய வகைகளில் மிளிர்பவர்களாகவே உள்ளனர். அந்தவகையில், இவரும் கவிதையிலிருந்தே தன் படைப்பிலக்கியப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இவரது முதல் கவிதை 1972ல் கோவில்பட்டியிலிருந்து திரு.அண்ணாமலையை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்து கொண்டிருந்த ‘நீலக்குயில்’ என்னும் இலக்கிய இதழிலே வெளியாகியுள்ளது.
இவரது முதல் சிறுகதை 1978இல் தாமரை இதழில் வெளிவந்துள்ளது. இவரது முதல் கவிதை 1972இல் வெளிவந்ததற்குப் பிறகு 6 ஆண்டுகள் கழித்துத்தான் (1978இல்) இவரது முதல் சிறுகதை வெளியாகியுள்ளது. இதிலிருந்து இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் இவர் ஏராளமான கவிதைகளைப் படைத்துக்கொண்டு இருந்திருப்பார் என்பது தெரிகிறது. ‘என் சக பயணிகள்’ என்னும் நூலின் முதல் கட்டுரையான ‘கல்யாணி’ பற்றிய கட்டுரையில் “என்னுடைய கவிதைகள் (1) அதில் (நீலக்குயிலில்) வந்துகொண்டிருந்தன” (தமிழ்ச்செல்வன்.,ச. 2013:9) என்று இவரே குறிப்பிட்டிருப்பதிலிருந்து இதை அறிந்துகொள்ள முடிகிறது.
இவ்வாறு எழுதத்தொடங்கிய இவரின் சிறப்பு இதுவரை ஏராளமாக எழுதிக் குவித்திருக்கிறார் என்பது இது ஒரு புறம் இருந்தாலும் அவரது எழுத்தின் சிறப்பு முழுக்கமுழுக்க மக்கள் நலன் – அடித்தட்டு வர்க்கநலன் சார்ந்தது என்பதே ஆகும். அதனினும் சிறப்பு, மத்திய அரசு இராணுவப் பணியை உதறித் தள்ளிவிட்டு மக்கள் பணியைத் தன்தோள்மீது சுமக்கிறார் என்பதும் ஆகும்.
ச.தமிழ்ச்செல்வனின் படைப்புலகம்
ஒவ்வொரு படைப்பிலும் உலகின் ஒரு பகுதி படைக்கப்படுகிறது. ஒவ்வொரு படைப்பும் ஒரு உலகைப் படைக்க முயல்கிறது. எனவே, தான் படைப்புலகம் எனப்பட்டிருக்கிறது போலும்! படைப்பு யாதாயினும் அது முற்போக்குப் படைப்போ பிற்போக்குப் படைப்பு – அதில் படைப்பு நுட்பம் (Creative power) வெளிப்படுத்தப் பட்டிருந்தால் அதைப் படைப்பு எனலாம். இத்தகைய, எந்தக் கருத்தியல் நிலை கொண்ட படைப்பாயினும் அது தான் முன்வைக்கும் கருத்தியலின் வழியில்; உருவில்; செயலில் உலகைப் படைக்க முனைகிறது அல்லவா?. இவ்வாறுதான், ச.தமிழ்ச்செல்வனின் படைப்புகளும் ஒரு சமத்துவப் பொதுவுடைமை உலகத்தைச் சமைப்பதைத் தன் கருத்தியல் இலக்காகக் கொண்டுள்ளன. இவர் உருவாக்க விரும்பும் உலகைப் படைக்க ஒற்றைத் தன்மை அல்லது ஒரே வகைமை கொண்ட படைப்புகளால் இயலாது என்று எண்ணித்தான், பன்முகத்தன்மை அல்லது பன்முக வகைமைகள் கொண்ட படைப்புகளைப் படைத்துக் கொண்டிருக்கிறார் என்பது ‘இவரின் படைப்புக்கொள்கை’ என வரையறுக்கலாம்.
பொதுவாக, படைப்பு என்றதும் இலக்கியப் படைப்பையே எண்ணும்; நோக்கும்; கருதும் பொதுப்புத்தி நிலையிலிருந்து மாறுபட்டு, எழுத்து வடிவம் மட்டுமன்றிப் பொருள்வடிவில் படைக்கப்பட்டுள்ள எல்லாமே படைப்புகள்தாம் என்ற பொதுப்புத்தி உருவாகிக் கொண்டிருக்கும் காலம் இது. இதுதான் பொருள்முதல்வாதப் பார்வை வழங்கியிருக்கும் படைப்பு குறித்த துல்லியமான பார்வை ஆகும். இந்த நோக்கு நிலையிலிருந்து, ச.தமிழ்ச் செல்வனின் படைப்புலகம் தொழிற்படும் பன்முக ஆளுமைப் பாங்கை வகைப்படுத்தலாம்.
ச.தமிழ்ச்செல்வனின் படைப்புகளின் பன்முக வகைப்பாடு
கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில், ச.தமிழ்ச்செல்வனின் படைப்புகளாகக் கிடைக்கும் நூல்களின் எண்ணிக்கை மொத்தம் 27. அவற்றுள், ஓரளவு பெருநூல்களாக உள்ளவை 17; சிறுநூல்களாக இருப்பவை 10. அவை பின்வரும் பொருண்மை வகைப்பாட்டுக்கு உரியனவாய் விளங்குகின்றன:
1. படைப்பிலக்கியம் – 3
2. அறிவொளி மக்கள் கல்வி – 2
3. அரசியல் கல்வி – 8
4. பெண்ணியக் கல்வி – 3
5. குழந்தைமைக்கல்வி – 1
6. கலை இலக்கிய ஆய்வு – 2
7. மானுட ஆளுமையியல் கல்வி – 1
8. கதம்பவியல் – 1
9. நாட்டுப்புறவியல் கல்வி – 1
10. பண்பாட்டுக்கல்வி – 4
11. சேவையியல் கல்வி – 1
இந்தப் படைப்பு வகைப்பாட்டுக்கு அப்பாற்பட்டுத் திரைப்படவியல், கதையாசிரியர், இதழியல் ஆசிரியர் போன்ற இன்னுஞ்சில வகைமைகளுக்குள்ளும் தன் படைப்பாளுமையை மேற்கொண்டு வருகிறார்.
மேலே விளக்கப்பட்டவை எல்லாம் அவரால் எழுதப்பட்டுச் சில பதிப்பங்கள் வெளியிட்டவை. ஒரே ஒரு நூல் மட்டும் இந்த வகைமைகளுள் படைப்பிலக்கியம் என்னும் வகைக்குள் வருவதெனினும் வராது. ஏனெனில், அது வேறொரு ஆசிரியரால் – இலக்கியவாதியால் தொகுக்கப்பட்டது! ஆம். எழுத்தாளர் திலகவதியால் தொகுக்கப்பட்ட ‘முத்துக்கள் பத்து – ச.தமிழ்ச்செல்வன்” என்ற நூல்தான் அந்த ஒரே ஒரு நூல்.
இதுகாறும் கண்ட படைப்புகளின் பன்முக வகைப்பாட்டுப் பட்டியல் பின்வரும் கருத்துக்களைப் புலப்படுத்திக் கொண்டிருக்கின்றன;
1. 11 வகைப்பாடுகளுக்குள் அடங்கியுள்ள அடக்கப்பட்டுள்ள இவரது படைப்புகளில் அரசியல் கல்வி, பண்பாட்டுக்கல்வி என்ற இரு வகைமைப் பண்பே மிகுந்துள்ளது எனலாம்.
2. பண்பாட்டுக் கல்வி என்ற வகைமையைக் காட்டிலும் (4) அரசியல் கல்வி என்ற வகைமைக்குள் (8) இவரது கவனக்குவிவு கூடுதல் அழுத்தம் பெற்றுள்ளது என்பதை அறியமுடிகிறது.
3. அரசியலும் பண்பாடும் மாற்றப்பட வேண்டியவை என்பதை இவரது நூல்கள் முன்வைக்கின்றன எனலாம்.
4. பண்பாட்டைவிட அரசியல் கூடுதல் முன்னுரிமை கொடுத்து மாற்றப்பட வேண்டியது என்பதைப் புலப்படுத்துகின்றன இவரது படைப்புகள். ஏனெனில், அரசியல் சூழல்தான் பண்பாட்டைத் தகவமைக்கிறது; கட்டமைக்கிறது; வாழ்வியலாக்குகிறது என்பது தெளிவு.
பன்முக வகைப்பாடும் பொருண்மை தொழிற்பாடும் (படைப்புகளின் இயங்கு தளங்கள்)
இங்கு வகைமைப்படுத்தப்பட்டள்ள 11 வகைமைகள் இன்னும் நுட்பமான பகுப்புக்கு உட்படுத்தப்பட்டால், மேலும் கூடுதல் எண்ணிக்கையிலான வகைமைகள் கிடைக்கும். இவ்வாறு, எத்தனை வகைமைளாகப் பகுக்கப்பட்டபோதிலும் இவை அத்தனையும் இருபெரும் பகுப்புக்குள்ளே அடங்கிவிடக் கூடியனவே. அவ்விருபெரும் பகுப்புகள் அரசியல், பண்பாட்டியல் என்ற இரண்டுமாகும்.
நூல்களின் வகைமைப் பகுப்புப்பட்டியலை எழுதுகிறபோது படைப்பிலக்கியம் 6. கலை இலக்கிய ஆய்வு 8. கண்பட்டுக் கதம்பவியல் 5. வகைமைகளைத் தவிர்த்து பிற 8 வகைமைகளைச் சுட்டும்போது 2. அறிவொளி மக்கள் கல்வி, 3. அரசியல் கல்வி 4. பெண்ணியக்கல்வி 5. குழந்தைமைக் கல்வி. 7. மானுட ஆளுமையியல் கல்வி 9. நாட்டுப்புறவியல் கல்வி 10. பண்பாட்டியல் கல்வி 11. சேவையியல் கல்வி என்றவாறு குறிப்பிடுவதிற்குள் ஒரு நுட்பம் உள்ளது. அதாவது, படைப்பிலக்கியம் தன்னியல்பாய்ப் படைக்கப்படுவது, கலை இலக்கிய ஆய்வு படைப்பின் நுட்பம் தேடுவது. பண்பாட்டுக் கதம்பவியல் என்பது பண்பாட்டுக் கூறுகள் குறித்த விமர்சனப் பார்வைகளை முன்வைப்பது என்ற வகைகளில் அமைவன. இம்மூன்றும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் சென்று சேர்ந்தே ஆகவேண்டும் என்ற இன்றிமையாத் தன்மை உள்ளனவல்ல. ஆனால் ‘கல்வி’ என்ற பின்னொட்டுடன் இடம்பெற்றுள்ள படைப்பு வகைமைகள் யாவும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் சென்றே ஆக வேண்டிய இன்றியமையாத் தன்மை கொண்டன. ஏனெனில், இயல் என்பது எழுதப்படுவது; கல்வி என்பது வெளிக்கொணரப்படுவது. கல்வி என்பது முழுக்க முழுக்க சமூகம் வழங்கிய அறிவு, ஆற்றல், படைப்புத் திறன்களை வழங்கும் தன்மையது. இந்தப் புரிதலிலிருந்து பார்த்தால் ‘கல்வி’ என்ற பின்னொட்டு சார்ந்த நூல்கள் எல்லாம் சமூக மாற்றத்தைத் துரிதப்படுத்தும் புரிதலை வழங்கவல்லன என்ற புரிதலிலிருந்து தான் இந்த 8 படைப்புவகைமைகளுக்கும் ‘கல்வி’ என்ற பின்னொட்டு அமைக்கப்பட்டது என்பதுதான் அந்த நுட்பமாகும்.
1. படைப்பிலக்கியம்
இவருடைய படைப்பிலக்கியங்கள் ‘சிறுகதை’ என்னும் இலக்கியவகையைச் சார்ந்தவை. இவர் கவிதை எழுதத் தொடங்கிச் சிறுகதைத் துறைக்கு வந்தவரெனினும் கவிதை நூலென எதுவும் வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை. 1970களில் சில இதழ்களில் கவிதைகள் எழுதிவந்துள்ளார். 1978இல் தாமரையில் இவரது முதல் சிறுகதை வெளிவந்திலிருந்து மொத்தம் 32 சிறுகதைகளைப் படைத்துள்ளார். அந்த 32 சிறுகதைகளும் ஒருசேரத் தொகுத்த தொகுப்பை 2006ஆம் ஆண்டு பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. இந்த 32 சிறுகதைகளும் 2006க்கு முன்பே வெளிவந்த இவரது இரண்டு சிறுகதைத் தொகுப்புகளிலிருந்தும் தொகுக்கப்பட்டவை. சில கதைகள் உதிரிக் கதைகளாக 1992க்குப் பின் எழுதியவை இருக்கக் கூடும். அவரது சிறுகதைத் தொகுப்பு நூல்களின் விவரம் வருமாறு;
1. வெயிலோடு போய், சிறுகதைகள், 1984.
2. வாளின் தனிமை, சிறுகதைகள், 1992.
3. மிதமான காற்றும் இசைவான கடலையும் (முழுச் சிறுகதைத் தொகுப்பு, 32 சிறுகதைகள், பாரதி புத்தகாலயம், சென்னை, 2006.
1984, 1992 ஆகிய இரு ஆண்டுகளிலும் வெளிவந்த இரு நூல்களிலும் இடம்பெற்ற கதைகளோடு சில சிறுகதைகளும் சேர்த்து 2006இல் ஒட்டுமொத்த சிறுகதைத் தொகுப்பாக வெளியிட்டுள்ளார். இவற்றிலிருந்து சிறந்த பத்து சிறுகதைகளைத் தொகுத்து, ‘முத்துக்கள் பத்து’ ச.தமிழ்ச்செல்வன் என்ற நூல், 2007 ; 126) அம்ருதா பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் திலகவதி. இந்தப் 10 சிறுகதைகளையும் படித்தாலே இவரது படைப்பாளுமையைப் புரிந்துகொள்ள முடியும். இன்று நவீனம், அந்த இசம் இந்தஇசம், என்று பேசுவதையெல்லாம் அன்றே (1978க்கு முன்பே) தன் சிறுகதைகளில் இடம்பெறச் செய்துள்ளார். இதுவும் கூட வலிந்து அவர் செய்ததில்லை. இயல்பான கற்றலிலிருந்து இத்தகைய பண்புகள் இவரது சிறுகதைகளில் இடம்பெற்றுள்ளன. இவரது முழுச் சிறுகதைத் தொகுப்புக்கு இவர் இட்டுள்ள நூற்தலைப்பே இவரது படைப்பாளுமைக்கும் கொள்கை-யாளுமைக்கும் கட்டியங் கூறுகிறது.
‘மிதமான காற்றும் இசைவான கடல்லையும்’ என்ற தலைப்பே பின்வரும் கருத்துக்களை வழங்குகிறது:
1. இயல்பாய் இரசிக்கத்தக்க இயைபிணைவைக் கொண்டவை. மாற்றம் இயல்பாய் நடந்தேறுமாறு இலக்கியம் படைப்பாக்கமும் இயல்பாய் எழவேண்டும்.
2. புயலால் இரசனையைத் தரஇயலாது. இதுவும் மாற்றம்தான் என்ற போதிலும் வலிவால் வரும் அழிவு வேண்டத்தக்கதல்ல.
முடிவுரையாக…
இதர 10 வகைமை நூல்களின் உள்ளடக்கப் பார்வையை விரிப்பின் பெருகும்; தொகுப்பன் எஞ்சும். எனவே, ச.தமிழ்ச்செல்வனின் படைப்புப் பணியினை இவ்வாறு மதிப்பிட்டு இப்போதைக்கு இந்தக் கட்டுரையை நிறைவுசெய்துகொள்ளலாம்.
1. 1975- அவர காலச் சூழலில், தன் இராணுவப் பணியை உதறிவிட்டு செம்மைசெய்யும் பணியை வரித்துக்கொண்ட இவர், முதலில் படைப்பிலக்கியவாதியாக முகிழ்த்தார். 1990களுக்குப் பிறகு, அறிவொளி இயக்கம் வந்த பின்பு, தான் எழுதிய 32 சிறுகதைகள் எப்படி இத்தனை மக்களைச் சென்றுசேரும் என்று எண்ணிய இவர் படைப்பிலக்குவாதியாக – புதிய சமூகப் படைப்பிலக்குவாதியாக – தன்னைக் களப்பணியாளனாக்கிக் கொண்டதால் இவரின் படைப்புகளின் பொருண்மைகள் மாறலாயின.
2. ஒரு எழுத்தாளனாகப் படைப்பிலக்கியம் படைப்பதைக் காட்டிலும் பொதுவுடைமைப் போராளியாக இருந்து மக்களிடம் நேரடியாக உரையாடுவதே இன்றியமையாதது என்று புரிந்துகொண்டதால் அரசியல், பண்பாட்டியல் நூல்களை அதிகமாகப் படைத்துள்ளார் (8+4=12).
3. இவரது எல்லாப் படைப்புகளையும் பார்க்கும்போது இவரது பரந்துபட்டதும் ஆழங்கால்பட்டதுமான பல்துறை அறிவாண்மை வியக்கவைக்கிறது. அதனினும் மேலாக, அவரது எல்லாப் படைப்புகளுக்குள்ளும் ஊடாடும் மானுடநேய சமத்துவப் புரட்சிகர உணர்வு படிப்பவருக்குள் மூச்சுக்காற்றைப் போல் இயல்பாய் உள்நுழைந்து சமூக உயிர்ப்புக்கும் நிலைப்புக்கும் மாற்றத்திற்கும் வழிவகுக்கிறது என்பது வெற்று முடிவுரையல்ல; நீங்களும் வாசிப்பதற்கான முகவுரை!
*** பன்னாட்டுக் கருத்தரங்கம், தென்பாண்டி நாட்டுப் படைப்பாளர்களின் சமுகச் சிந்தனைகள், கே.எஸ்.ஜி. கல்லூரிக் கலையரங்கம், கோயம்புத்தூர், நாள் 26.12.201
Thursday, 19 November 2015
Saturday, 5 September 2015
Tuesday, 1 September 2015
தமிழ் வீதி: வழியெங்கும் புத்தகங்கள்
தமிழ் வீதி: வழியெங்கும் புத்தகங்கள்: நான் ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தபோது எங்கள் பள்ளிக்கு எதிரே ஒரு வாசக சாலை இருந்தது.அதில் சாணி மெழுகிய திண்ணையில் விரித்த ஓலைப்பா...
Subscribe to:
Posts (Atom)
