Tuesday 13 January 2015

தமிழ்ச் செவ்விலக்கியங்களில் பௌத்த வழக்காறுகள்
முனைவர் சு.மாதவன்
உதவிப் பேராசிரியர்
தமிழாய்வுத்துறை
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி ()
புதுக்கோட்டை 622001
பேச : 9751 330 855 மின் அஞ்சல் :  www.semmozhi200269@gmail.com

            ஒரு நூலெழுதத் தக்க தரவுத் தளங்கள் நிறைந்த தலைப்பு இது. ஒரு கட்டுரையளவில் இங்கு அணுகப்படுகிறது. தமிழ்ச் செவ்விலக்கியங்கள் உலகளாவிய மானுடப் பொதுமை சான்றது; பௌத்தமும் அவ்வாறானதே. இலக்கியங்களில் செம்மை உள்ளிட்ட கூறுகள் நிறைந்திருப்பதானது வாழ்க்கையிலும் அவை நிறைந்திருக்கக் கண்டோ நிறைந்திருக்க வேண்டி விரும்பியோ இயல்வன. தமிழ்ச் செவ்விலக்கியப் பெரும்பரப்பில், முதலில் கிடைத்துள்ள சங்க இலக்கியங்களான பாட்டும் தொகையும் சமயச் சார்பற்ற பாங்குடன் ஒளிர்ந்துமிளர்வதை அறிஞர் பலரும் எடுத்துக்காட்டியுள்ளனர். ஏனெனில், நிறுவனமயப்பட்ட சமயமாக எந்தச் சமயமும் அக்காலத்தில் வளர்ந்திருக்கவில்லை. நம்பிக்கைவழிபாட்டுக் கூறுகளே அவற்றில் இடம்பெற்றுள்ளன. சிவனியமோ மாலியமோ சைவ, வைணவச் சமயங்களாகத் தோற்றம் பெறவில்லை; கருக் கொண்டிருந்தன; வைதீக நெறியும் அவ்வாறானதே.
            தமிழர் தம் திணைசார் வாழ்வியலில் பரத்தைமை நெறியும் போர்நிகழ் வெறியும் மிகுந்ததால் சமூகத்தின் அசைவியக்கம் நிலைகுலைந்து போயிருந்தது. இதனால் அகத்திலும் புறத்திலும் அறநெறிகள் தோன்றி வளர்ந்து கொண்டிருந்தன. இவ்வாறு, தமிழ்ச் சமூகம் தனக்கான அறநெறி விழுமியங்களைத் தன்னியல்பாகக் கட்டமைத்துக் கொண்டிருந்த வேளையில் வடஇந்தியாவிலிருந்து பௌத்தமும் சமணமும் நிறுவனப்பட்ட சமயங்களாகவே தமிழகத்துக்கு வந்து சேர்ந்தன. வந்து சேர்ந்த பௌத்த, சமண சமயங்களில் சமணம் கடுமையான பின்பற்றுநெறிகளைக் கொண்டிருந்ததால் நடுநிலையான பின்பற்றுநெறிகளைக் கொண்டிருந்த பௌத்தம் மக்களின் ஏற்புநிலையைப் பெற்றது. சங்க இலக்கியங்களில் சமணத்தைக் காட்டிலும் பௌத்தம் மிகுதியாக ஊடுருவி நிற்பதிலிருந்து இத்தகைய முடிவுக்கு வரலாம்.
                இத்தகைய நோக்குநிலையிலிருந்து பௌத்த வழக்காறுகள் தமிழ்ச் செவ்விலக்கியங்களில் இடம்பெற்றுள்ள போக்குகளை இக் கட்டுரை தொட்டுக்காட்டத் தொடர்கிறது.
பௌத்த வழக்காறுகள்
                மனிதர்களின் சிந்தனைகளிலும் செயல்களிலும் இரண்டறக் கலந்திருப்பனவற்றை வழக்காறுகள் என்கிறோம். அவை வாழ்வியலின் கருத்தியல்நிலையிலும் பண்பாட்டுநிலையிலும் தன்னியல்பாய் உருவானவையும் வந்து கலந்தனவையாகவும் அமைகின்றன. இத்தகைய வழக்காறுகளை,
1.            நம்பிக்கைகள்
2.            வழிபாடுகள்
3.            சடங்குகள்
4.            நடத்தை நெறிகள் கடைப்பிடி நெறிகள்
என்ற நான்கு வகைகளுக்குள் அடக்கலாம். இவற்றுக்குள் பௌத்த வழக்காறுகளாக எவைஎவை தொழிற்பட்டன என ஆராயலாம்.
சங்க காலப் பெயர்களில்…..
                சங்க கால வாழ்வியலின் ஊடாகச் சில வழக்காறுகளின் மூலக்கூறுகளின் பதிவுகள் தென்படுகின்றன. மனித வாழ்வியலில் ஒரு சமூகத்தின் சிந்தனைகள் முதலில் தொழிற்படும் இடம் குடும்பம். குடும்பத்தின் ஓர் அலகு தனிமனிதன். ஒரு குடும்பம் எத்தகைய வாழ்வியல் சிந்தனைகளைக் கொண்டிருந்தது என்பதை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பவை மனிதர்களின் பெயர்கள்.
                மனிதர்களின் பெயர்களில்தான் அந்தச் சமூகத்தின் பன்முகச் சிந்தனை விதைகள் தெளிக்கப்பட்டிருக்கும். இத்தகைய நோக்கில், சங்ககால மானிடர்களின் பெயர்களில் பௌத்தச் சுவடுகள் தென்படுமாற்றை அணுகலம்.
                ‘ஐயாதி சிறுவெண்தேரையார்என்னும் புலவருக்கு மனிதனின் நன்னடத்தைக்கும் நல்வாழ்க்கும் மூலமான ஐந்து நன்னெறிகளைப் பின்பற்றியவர் என்னும் பொருளில் அதாவது பௌத்தப் பஞ்சசீலங்களைப் பின்பற்றியவர் என்னும் பெயரில் பெயரிடப்பட்டிருக்கலாம்; பெயரிட்டுக் கொண்டிருக்கலாம்.
                ‘குண்டுகட் பாலியாதனார்என்னும் புலவர் பெயரில் உள்ளபாலிஎன்னும் சொல் புத்தரின் தாய்மொழியும் பௌத்த மெய்யியல்களின் மூலமொழியுமானபாலிமொழியைக் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. இவரது பெயரின் முன்னொட்டானகுண்டுகட்என்பதும்முரவெயமயடஎன்னும் இன்றைய ஆந்திர மாநில ஊரைச் சுட்டுவதாகலாம். ‘முரவெயமயடஎன்னும் இவ்வூர் சங்க காலத்தில் தமிழகத்து ஊர்களுள் ஒன்றாக நிலவியதே என்பதும் பொருத்தமாகவே உள்ளது. எனவே, ‘குண்டுகட் பாலியாதனார்என்பவர்முரவெயமயடஊரைச் சேர்ந்த பாலிமொழியறிந்த பௌத்தத் துறவியாகலாம். மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், கோவூர்கிழார், என்பது போலவே இப்பெயராகும்.
சங்க இலக்கியங்களில்
                எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களுள் பௌத்த வழக்காறுகள் மிகுதியாக இடம்பெற்றுள்ள நூல் புறநானூறு ஆகும். சமயம் என்பது தமிழர் மரபின் பகுப்புப்படி புறம் சார்ந்தது. எனவே, புறநானூற்றில் சமய வழக்காறுகள் இடம்பெறுவது இயல்பே
                புறநானூற்றில் 360-வது பாடலாக அமைந்துள்ள பாடலை இயற்றியவர் பெயர் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், கிடைத்துள்ள பாடலில் பௌத்தச் சார்புடைய சிந்தனைகள் இடம்பெற்றுள்ளமை அறியலாகிறது. அப்பாடல் வருமாறு:
                                பெரிதுஆராச் சிறுசினத்தார்
                                …………………………….
                                அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது
                                இன்னும் அற்று அதன் பண்பே அதனால்                               
                                நிச்சமும் ஒழுக்கமும் முட்டிலை பரிசில்
                                நச்சுவர் கையின் நிரப்பில் ஓம்புமதி”                            (புறநா. 360)
இப் பாடல் மூன்று கருத்துக்களை முன்வைக்கிறது. அவை வருமாறு:
1.            செல்வமும் மன்னி நில்லாது – (செல்வம் நிலையில்லாதது)             செல்வம் நிலையாமை
2.            அற்று அதன் பண்பே - இற்று இதன் பண்பே  (நாலடி.   )
            உயிரில்பொருள், உயிருள்பொருள் இரண்டின் பண்புகளும்                 நிலையில்லாததாகவே உள்ளது.
                உயிர் நிலையாமை, யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை
3.            நிச்சமும் ஒழுக்கமும் முட்டிலைநாள்தோறும் ஒழுக்கத்தில்                 குறையாது வாழ வேண்டும் - ஒழுக்கத்தின் இன்றியமையாமை
            இப் பாடலில் இடம்பெற்றுள்ள கருத்துக்களைத் தொகுத்தால் நிலையாமை நிலைப்பு என்பதாக, அதாவது நிலையாமை என்னும் நிலையறிந்து நிலைப்புமிக்க வாழ்க்கைக்குரிய நல்லொழுக்க நெறிகளை விழிப்போடு பின்பற்ற வேண்டும் என்னும் கருத்தை வழங்குகிறது. வாழ்க்கைகக்குச் செல்வம் தேவை என்றாலும் செல்வம் நிலையில்லாதது, வாழ்க்கை நிலைக்கும் என்று எண்ணினால் வாழ்க்கையை மனிதன்வழியாக நிகழ்த்தும் உயிர் நிலையில்லாதது, உயிர்நிற்கும் யாக்கை நிலையில்லாதது யாக்கையில் தோன்றும் இளமை நிலையில்லாதது என்று எல்லாம் நிலையில்லாதனவாய் உள்ளன என்பதால் வாழ்க்கை நிலையாமையை உணர வேண்டும். அவ்வாறு, உணர்ந்தால் இந்த உயிர், உடல், இளமை, செல்வம் என்ற நிலையில்லாத நான்கையும் பெற்றுள்ள மனிதன் அவனது வாழ்க்கைக்குப் பிறகும் நிலைத்துப் பிறராலும் பின்பற்றப்பட்டுப் புகழப்படுவதாக அமைவன நல்லொழுக்க நெறிகளே என்ற முடிவுக்கு வரலாம். இவ்வாறான, காரணகாரிய இயைபைக் கொண்டு விளங்குகிற இப் பாடலுக்குள் பௌத்தச் சார்புநிலைக் கோட்பாடு இடம்பெற்றிருப்பதாகப் படுகிறது. பௌத்தப் பிடகங்களுக்குள்ளிலிருநது பொருத்தமான ஒப்பிட்டுப் பகுதி கிடைத்தால் இதுகுறித்த அழுத்தமான முடிவுக்கு வரலாம்.
                இன்னொரு பாடலான புறநானூறு 363 இயற்றியவர் ஐயாதிச் சிறுவெண்டேரையர் ஆவார். இவரது பாடல் வருமாறு:
                               
                                இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம்
                                ……………………………………………….
                                உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
                                மடங்கல் உண்மையோ மாயமோ அன்றே
                                ………………………………………………
                                முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே”                       (புறநா. 363)
                இப்பாடலின் ஒட்டு மொத்தக் கருத்தாகத் துறவுநெறிக் கருத்தமைவும் உட்செறிகருத்தாக நிலையாமைக் கருத்தியலும் இடம்பெற்றுள்ளன. உயிர் நிலையாமை அறிந்து ஒழுகவேண்டும் என்பதை உணர்த்துகிறது இப்பாடல். இப்பாடலும் பௌத்தச் சார்புநெறி பேசுகிறது எனலாம்.
                ஒளவையாரின் புறநானூற்றிப் பாடல் 187 பௌத்த மெய்யியல் - அறவியல் நூலான தம்மபதச் சுலோகம் 98ன் நேரடி மொழிபெயர்ப்பாக உள்ளதைத் தெ.பொ.மீ. மு.கு.ஜகந்நாதராஜா ஆகியோர் ஆராய்ந்து நிறுவியுள்ளனர். (மாதவன்.,சு. 2012: 283 – 285)
                இதேபோல் பௌத்தச் சக்கரமான அசோக தருமச் சக்கரத்தின் வழக்காற்றை ஏற்பதாகப் புறநானூறு 175 ஆம் பாடலும் அதனை மறுப்பதாகப் புறநானூறு 233 ஆம் பாடலும் உள்ளதை சு.மாதவன் ஆராய்ந்து நிறுவியுள்ளார். (மாதவன்.,சு.2012 : 285 – 287).
                பத்துப்பாட்டு நூல்களுள் ஆங்காங்கே பௌத்த வழக்காறுகள் தென்படுகின்றன. மதுரைக் காஞ்சி எனும் நூல் பௌத்த விகாரையில் பௌத்த உபாசகர்கள், உபாசகிகள் பூவைத்து வழிபட்டசெய்தியைக் குறிப்பிடுகிறது.
                நெடுநல்வாடை எனும் நூலில்பிடகம்என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இச் சொல் பௌத்தத் திரிபிடகத்தைக் குறிப்பதாகலாம்.
பதினென்கீழ்க் கணக்கில் பௌத்தக் கடைப்பிடி நெறிகள்
                                திரிசரணம்                                            -              மூன்று வணக்கம்
                                ஆரிய சத்தியம்                               -              நான்கு வாய்மைகள்
                                பஞ்ச சீலம்                                           -              ஐவகை நெறிகள்
                                அட்டாங்க மார்க்கம்           -              எண்வகை நெறிகள்
                                தச சீலம்                                    -              பத்துக் கடைபிடி நெறிகள்
                                பிரதீஸ் சமுத்பாதா               -              பன்னிரு சார்பு நெறியறிதல்
            போன்ற பற்பல கடைப்பிடிநெறிகளைத் தன்னகத்தே கொண்டு திகழ்வது பௌத்தம். இவற்றுள் பலவற்றின் சிந்தனைச் சிதறல்களைப் பதினெண்கீழ்க் கணக்கு நூல்களில் பரவலாகக் கண்ணுற முடிகிறது. (விரிவான விவரங்களுக்கு, மாதவன்.,சு. தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த சமண அறங்களும், 2008).
                திருக்குறளில் ஒப்புரவறிதல், கொல்லாமை, இன்னா செய்யாமை, கள்ளாமை, பொய்யாமை, கள்ளுண்ணாமை, மெய்யுணர்தல் போன்ற பல அதிகாரங்களில் பௌத்தச் சிந்தனைகளைப் பரக்கக் காணலாம். பௌத்தப் பன்னிரு சார்பு நீக்கக் கோட்பாட்டு வழக்காறு, பௌத்த வழக்காறுகளுக்கு அடிப்படை பன்னிரு சார்புகளும் அதன் நீக்கமும் ஆகும். எனவே, பன்னிரு சார்பு நீக்கம் குறித்த சிந்தனைகளின் பதிவுகளைத் திருக்குறளில் காணலாம்.
பன்னிரு சார்புகளாவன
                பேதைமை (அவித்தை), செய்கை (ஸம்ஸ்காரங்கள்), உணர்வு (விஞ்ஞானம்), அருவுரு (நாமரூபம்), அறுவகை வாயில்கள் (ஷடாயதனங்கள்), ஊறு (இன்பம் துன்பம்) (பதோ), நுகர்வு (வேதனா), வேட்கை (தண்ஹா), பற்று (உபாதானம்), கருமக்கூட்டம் (பவோ), பிறப்பு (ஜாத்தி)
                இவை ஒவ்வொன்றும் அடுத்தடுத்து வரும் ஒவ்வொன்றையும் தோற்றுவித்து வளர்த்தெடுத்துச் செல்கின்றன. பேதைமையில் தொடங்கி ஒவ்வொன்றாய் வளர்ந்து இறுதியில் அவை பிறப்பை உருவாக்குகின்றன. பேதைமை எனும் மூலச் சிந்தனை இயல்பு அழிந்தால் - ஒழிந்தால் வராமலிருந்தால் பிறப்பு என்பதே நேராது - தோன்றாது. இக் கருத்தை
                                                பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும்
                                                செம்பொருள் காண்பது அறிவு”                                               
என்னும் குறள் மிகத் தெளிவாக வலியுறுத்துகிறது. வலியுறுத்தித் தெளிவிக்கிறது. எனவே,
சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின் பற்றழித்துச் சார்தரா சார்தரும்             நோய்”(36:9)
என்றவாறு,
                                ‘யாதெனின் யாதனின் நீங்கியான் நோதல்
                                அதனின் அதனின் இலன்
என்று வாழ்க்கைக் கடைப்பிடிநெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை வள்ளுவம் வலியுறுத்துகிறது.
                இத்தகைய நோக்குநிலையில் நின்று பன்னிரு சார்புகளும் நீங்க திரிசரணத்தைக் கடைப்பிடித்து நான்கு வாய்மை அறிந்து பஞ்சசீலத்துடன் அட்டாங்க மார்க்க நெறிநிற்றல் வேண்டும் என்பதை வள்ளுவம் பௌத்த வழக்காறுகளுடன் சிந்தனையைத் தூண்டுகிறது என்பது தெளிவு.
                பன்னிரு சார்புகளை அறிதலே பௌத்த உண்மைத் தேட்டம். இத்தகைய தேட்டத்தைத் தடுப்பனவற்றைஆஸவங்கள்என்கிறது பௌத்த மெய்யியல் வழக்காறு. ஆஸவங்கள் நான்கு வகைப்படும். இந் நான்கு ஆஸவங்கள், எவ்வாறு உண்மைத்தேட்டத் தடுப்புகளாகச் செயல்படுகின்றன என்பதை வள்ளுவம் ஆங்காங்கே குறிப்பிடுவனவற்றை இவ்வாறு தொகுத்துப் பகுத்து ஒப்புநோக்கி அறியலாம்:
வள்ளுவம்                                                                                                                -              பௌத்தம்
காமம் வெகுளி                                                                                   -              காமம்
மருளானாம் மாணாப்பிறப்பு                                                       -              பவம் (பிறப்பு)
பொருளல்லவற்றைப் பொருளென்று உணரும்  -              திட்டி (பொய்க்காட்சி)
பிறப்பு என்னும் பேதைமை                                                              -              அவிச்சை (அறியாமை)

பழமொழியும், பன்னிருசார்பு நீக்கக் கோட்பாடு எனும் பௌத்த வழக்காற்றைப் பின்வரும் பாடலில் வெளியிட்டுள்ளது:
                                திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வு ஆக
                                 எரியும் சுடர்ஓர் அனைததால்; தெரியுங்கால்
                                 சார்வுஅற ஓடிப் பிறப்பு அறுக்கும்; அஃதேபோல்
                                 நீர்அற நீர்ச்சார்பு அறும்”                                                            (பழ.219)


ஓர் அறையுள் பாம்பொடு உறைந்த புத்தர்
                புத்தர், புத்தஞானம் பெற்ற பிறகு பல்வேறு இடங்களுக்குச் சென்று தன் நடுவழிப்பாதைக் கோட்பாட்டை (மத்திய மார்க்கம்) விளக்கிச் சொல்லி வந்து கொண்டிருந்த காலத்தில், ஒருநாள் உருவேலா என்றும் கயையில் உள்ள காசியபருடைய தவப்பள்ளிக்குச் செல்கின்றார். அங்கு காசியபரிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார். அதாவது, ‘இன்று இரவுப் பொழுது ஆகிவிட்டதால், தங்களின் தவப் பள்ளியில் ஒருநாள் இரவு மட்டும் தங்கிச் செல்ல அனுமதிக்க வேண்டும்என்று கோருகிறார். அதற்குக் காசியபர், “புத்தரே! இங்கு உறைவிட வசதி தாங்கள் தங்கும்படியான நிலையில் இல்லை. இருக்கும் ஒரு அறையிலும் நாகம் ஒன்று குடியிருக்கிறது. அங்கு தங்கினால் தங்களுக்குத் துன்பம் உண்டாகி விடுமே! என்ன செய்வதுஎன்று மறுகினார். உடனே புத்தர், ‘காசியபரே! கவலைப்படாதீர். அந்த ஓர் அறையே போதுமானது. நான் தங்கிக் கொள்கிறேன்என்று சொல்லவும் காசியபரால் மறுமொழி பேச இயலவில்லை. புத்தர் அன்று இரவு அங்கு தங்கினார். இரவில் காசியபர் சொன்னதுபோலவே நாகம் சீறிக்கொண்டே இருந்தது. புத்தர் தன் ஞான பலத்தாலும் ஆன்ம உறுதியாலும் எதிர்கொண்டேயிருந்துள்ளார். விடிந்து, போய் அறைக்குள் பார்த்தார் காசியபர். நாகம் செத்துச் சுருண்டு கிடந்தது. புத்தர் ஞான ஒளி மேன்மையுற அழகுறத் தோன்றினார். இப்படி, புத்தர் தன் ஞானபலம், தவவலிமை, மனஉறுதி, அஞ்சாமை ஆகியனவற்றால் நஞ்சுகொள் - நஞ்சுகொல் நாகத்தைச் சாகடித்தார் என்ற கதை ஒரு பௌத்த வழக்காறாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த வழக்காற்றைப் பழமொழி என்னும் நூல் கீழ்வரும் பாடலில் பதிவு செய்துள்ளது:

                                தலைமை கருதும் தகையாரை வேந்தன்
                                 நிலைமையான் நேர்செய் திருத்தல் - மலைமிசைக்
                                 காம்பு அணுக்கும் மென்தோளாய் அஃதன்றோ ஓர் அறையுள்
                                 பாம்பொடு உடன்உறையு மாறு”                                    (பழ.249)

பௌத்த பஞ்சசீலம்
                கொல்லாமை, கள்ளாமை, பொய்யாமை, காமமின்மை, கள்ளுண்ணாமை ஆகியன பௌத்தப் பஞ்சசீலங்கள் ஆகும். இவற்றை வலியுறுத்தும் பாங்கை அன்றைய சமணம் உள்ளிட்ட பல சமயங்களும் கொண்டிருந்தன. எனவே, சமூகப் பொதுநெறியாகவும், பௌத்த சமய அறநெறியாகவும் திகழ்ந்த இப் பஞ்சசீலங்களைத் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், ஏலாதி போன்ற பதினெண்கீழ்க் கணக்கு }ல்களும் ஆங்காங்கே பதிவு செய்துள்ளன.
காப்பியங்களில் பௌத்த வழக்காறுகள்
சிலப்பதிகாரத்தில
                காப்பியங்களில் தமிழ்ச் செவ்விலக்கிய வரிசையில் இடம்பெற்றிருக்கும் நூல்களில் இரண்டு மட்டுமேசிலம்பும் மேகலையும், இரண்டினுள் சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் மட்டும் பௌத்த வழக்காறுகள் பதிவாகியுள்ளன:
1.            பணையைந்து ஓங்கிய பாசிலைப் போதி
       ஆணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி”                  (சிலப். 10: 11-12)
2.            “அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்
        இந்திர விகாரம் ஏழுடன் போகிப்……….”                                           (சிலப். 10: 13-14)

            வரந்தரு காதையில் மங்களமடந்தைக் கோட்டம்என்று குறிப்பிடப்பட்டிருப்பது இன்றைய குமிளி (கேரளா)யிலுள்ள மங்களாதேவி கோட்டமேயாகும். அக்கோட்டத்தில் சாத்தனார் (பாகண்ட சாத்தன்), மங்களா தேவி என்கின்ற பூர்ணகிரி ஆளுடைய நாச்சியார் (பூர்ணாதேவி), புஷ்கலா தேவி ஆகியோருக்குக் கோயில்கள் உள்ளன. இந்த அமைப்பு தாந்தீரிக் அமைப்பு ஏற்பட்டதன் பின்னர் உண்டானது ஆகும் (செல்லன் கோவிந்தன்.,2001 : 147) தமிழகம் முழுக்க இருக்கும் ஐயனார் கோவில்கள் எல்லாம் இந்த பௌத்தப் பின்னணியில் உருவானவையாகும்.
மணிமேகலையில்
                மணிமேகலையில் பௌத்தம் என்று தனியே சிந்திக்க வேண்டியதில்லை. ஏனெனில், மணிமேகலையே முழுநிறை பௌத்தக் காப்பியம் ஆகும். இன்றுஞ் சொன்னால் ஒரே நேரத்தில் அது பௌத்தக் கலைக் களஞ்சியமாகவும் பல்சமயக் களஞ்சியமாகவும் திகழ்கிறது.
புத்த வழிபாடு
                மஹாயான பௌத்தமும் ஈனயான பௌத்தமும் கலந்து வழிபாட்டு நெறிகள் மணிமேகலையில் காணக் கிடைக்கின்றன:
1.            அந்தரத்தில் பறத்தல், உருமாறுதல், தாந்திரீகத்தன்மை
      கொண்ட உருவ வழிபாட்டு புத்தர்
2.            புத்த பாத பீடிகை வணக்கம் - ஹீனயான பௌத்தம்
                (செல்லன் கோவிந்தன்., 2001: 150)
            புத்தனை வழிபடத் தொடங்கிய மகாயான பௌத்தத்தில் வைணவநெறிகளை சரணாகதிக் கொள்கை (மணி. 30: 3-5) இடம்பெற்றுள்ளது.
                                “புத்த தன்ம சங்க மென்னும்
                                முத்திற மணியை மும்மையின் வணங்கி
                                சரணா கதியாய்ச் சரண்சென் றடைந்தபின்”            (மணி: 30: 3-5)

            சரணாகதியாகி விட்டால், உள்ளம் நெக்குருகப் பாடி வேண்ட வேண்டுமே? அதுவும் வந்துவிடுகிறது. பௌத்தத்துக்குள், போற்றிப் பாடல்கள் எனப்படும் பாசுரவடிவில் சாத்தனார் ஆங்காங்கே பாடியுள்ளார்:
                                “எங்கோ னியல் குணனேதமில் குணப்பொருள்
                                ………………………………………………  பாசுரம்-1 (5: 71-79)
                                “புலவன் தீர்த்தன் புண்ணியன் புராணன்
                                ……………………………………….                             பாசுரம் -2 (5:98-105)
                                “இளவள ஞாயிறு தோன்றியதென்ன”                பாசுரம் -3 (10: 11-15)
                                “மாரனை வெல்லும் வீர நின்னடி”                          பாசுரம் -4 (11: 61-70)
                                                                                                (கந்தசாமி.,சோ..1977: 10-11)
புத்தரின் பெயர்கள்
                மகாயான பௌத்த மரபில் புத்தருக்குப் பல பெயர்கள் தோன்றின. ஒவ்வொரு பெயருக்குள்ளும் வைதீகச் சார்பெதிர்ப்புக் கூறுகள் இருப்பதாய்க் காணமுடிகிறது.
உலகத் தோற்றத்திற்கு முன் ஒளிர்ந்த பரம்பொருள்தான் ஆதிநாதர் என்றும் ஆதிபுத்தர் என்றும் தொழப்படும் இறைவன் ஆகும். இவர் அவ்வப்பொழுது மக்களை நெறிப்படுத்த அவதாரம் எடுப்பார். இங்ஙனம் காரண்ட வியூகம் என்னும் மகாயான நூல் மொழிகிறது. மணிமேகலையில் ஆதிமுதல்வன் (6:11, 10:61, 12:37, 107, 29:23), ஆதிசால் முனிவன் (7:19), ஆதிசினேந்திரன் (29:47) முதலிய திருப்பெயர்கள் உலகிற்கு ஆதியாய் உள்ள முதல்வனாகப் புத்தர் பிரானைச் சுட்டும் தொடர்களாக வழங்குகின்றன. ஆதிபகவன் என்ற குறள் தொடரும் இவற்றுடன் இணைத்து நோக்கத்தக்கது. பகவன் என்ற சொல் மணிமேகலையிலும் புத்தரைக் குறிக்கும், (3:61, 26:54), முதல்வன் (25:58, 28:120), மன்னுயிர் முதல்வன் (25:117, 29:15), முன்னவன் (28:141), தொல்லோன் (11:64), தலைவன் (11:43, 15:26, 12:55), நாதன் (11:173-4, 12:101-2, 26:47, 28:77, 89, 144, 29:24), புராணன் (5:98), எங்கோன் (11:126, 5:71), அண்ணல் (26:53) எனவரும் திருப்பெயர்களும் புத்தபிரானின் முதன்மை தன்மையினை (பரத்துவம்) மொழிவனவாக உள்ளன. (கந்தசாமி.,சோ.. 1977: 11-12)
புத்தர் பலர் என்னும் வழக்காறு
                பாடலிபுத்திரத்தில் கி.மு.243ல் நடைபெற்ற மூன்றாவது பௌத்த கூட்டத்தில் கௌதமருக்கு முன்னால் வாழ்ந்த புத்தர்கள் 24 பேர் என்று நிச்சயித்தனர். (செல்லன் கோவிந்தன்., 2001: 155) இதை,
                                “இறந்த காலத்து எண்ணில் புத்தர்களும்          (மணி. 30: 14)
என்று மணிமேகலை வழங்குகிறது.


புத்தரின் அவதாரம் குறித்த வழக்காறுகள்
                புத்தரின் அவதாரம் குறித்த வழக்காறுகள் ஹீனயானத்தில் இல்லை. மகாயானம் அது குறித்து நிறையப் பேசியுள்ளது. கடவுள் அவதார மறுப்புக் கொள்கை கொண்ட புத்தரையே பரம்பொருளாக வழிபட்டதன் விளைவு இது. புத்தசரிதம், இலலித விஸ்தரம், இலங்காவதார சூத்திரம், மகாவத்து முதலிய மகாயான நூல்களில் புத்தரின் அவதாரம் புனைந்துரைக்கப்பட்டது. சுத்தபிடகத்தின் முதல் நான்கு நிகாயங்களில் கௌதம புத்தருக்கு முன் ஆறு புத்தர்கள் இருந்தனர் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது. புத்தவமிசம் என்ற நூலில் 24 புத்தர்களைப் பற்றி குறிப்பு உண்டு.

மகாயான நூல்கள்
காலம்
புத்தரின் தொகை
1.            மஹாவஸ்து
கி.பி.100-200
முந்நூறு மில்லியன்
2.            புத்தசரிதம்    கி.பி.            

கி.பி .200
கங்கைகரையின் மணலை ஒத்தவர்
3.            இலங்காவதார  சூத்திரம்
கி.பி. 300
கங்கைக் கரையின் மணலை ஒத்தவர்
4.            லலிதவிஸ்தரம்
கி.பி. 300
பத்து மில்லியன்
5.            சத்தரும புண்டரிகம்
கி.பி.300-400
பத்து மில்லியன்
6.            சுகாவதி வியூகம்
கி.பி. 300
எண்ணிறந்தவர்
7.            கருணா புண்டரிகம்
கி.பி. 300    
எண்பத்தொன்று மில்லியன்                 நியூதங்கள்
8.            பிரஞ்ஞா பாரமித சதகம்
கி.பி. 300    
எண்ணிறந்தவர்

                                                                                                                (கந்தசாமி.,சோ.. 1977: 2)
                இந் நூல்களின் பயிற்சி சாத்தனார்க்கு இருந்திருத்தல் வேண்டும். இம் மகாயான நூல்களை அடியொற்றியே, “இறந்த காலத்து எண்ணில் புத்தர்களும் (30:14) என்று மணிமேகலையில் குறித்துள்ளார் சாத்தனார்.
                இனிப் பிறக்கபோகும் புத்தருக்குமைத்ரேயர்என்று பெயர் என்கின்றனர். இவ்வாறு, புத்தரின் அவதாரம் இரு வகைகளில் பேசப்படுகிறது:
1.            புத்தர் இவ்வாறெல்லாம் பிறந்தார்
2.            இவர்தான் புத்தராகப் பிறந்தார்
            இதுவரை கண்டவை முதல்வகை. இரண்டாம் வகையில், இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான சமயங்களில் கடவுளர்களின் முந்தையபிந்தைய அவதாரம் தான் புத்தர் என்னும் வழக்காறு நிலவுகிறது. சிவன், திருமால், பிரம்மா போன்ற கடவுள்கள் தான் புத்தராக அவதரித்தார்கள் என்று ஒவ்வொரு சமயங்களும் சொல்கின்றன. அந்த அளவுக்கு கருத்தியல், மெய்யியல், வாழ்வியல் ஏற்புக்குரியவராகப் புத்தர் திகழ்கிறார் என்பது பெறப்படுகிறது.
புத்தர் வருகை நிமித்தங்கள்
                வைதீக இருள் படர்ந்துகிடந்த இந்திய நாட்டில் ஞாயிறன்ன புத்தன் ஒளிபரப்பினான் என்பதை,
                                இருள் பரந்து கிடந்த மலர்கலி யுலகத்து
                                விரிகதிரிச் செல்வன் தோன்றின னென்ன
                                வீரெண்ணூற்றோ டீரொட்டாண்டினில்
                                பேரறிவாளன் தோன்றி மகதநன் னாட்டும்
                                கொருபெருந் திலகமென்
                                சாக்கைய ராளுந் தலைத்தர் வேந்தன்
                                ஆக்கையுள் றுதித்தன னாங்கவன் றானென?
என்று மணிமேகலை பாடுகிறது.
                உலகில் புனிதர்கள் தோன்றும் போதெல்லாம் சில நிமித்தங்கள் நிகழ்ந்தனவாகக் கூறுதல் மரபு. இயேசு, முகம்மது நபி போன்றோர் தோன்றியபோது சில அதிசய நிகழ்வு நிமித்தங்கள் நடைபெற்றன என்பர். அவ்வாறே, புத்தர் தோன்றியபோதும் நிகழ்ந்தன என்று மணிமேகலை குறிப்பிடுகிறது:

                                புத்த ஞாயிறு தோன்றுங் காலைத்
                                  திங்களும் ஞாயிறுந் தீங்குறா விளங்கத்
                                  தங்கா நாள்மீன் தகைமையின் கடக்கும்
                                  வானம் பொய்யாது மாநிலம் வளப்படும்
                                  ஊனுடை உயிர்கள் துயரைக் காணா
                                  வளிநிலம் கொட்கும் மாதிரம் வளம்படும்
                                  …………………………………………         (மணி 12: 86-103)
            இவ்வாறே, கடல் நலம் பல தரும்; பால்மிக ஊறும்; பறவை உணவுக்காக வேற்றிடம் நீங்கா; பகைமை நீங்கும்…….. என்றவாறு இயற்கையில் நிகழச் சாத்தியமானவற்றைக் கூறியிருப்பதே பௌத்த வழக்காற்றின் சிறப்பு எனலாம்.
பௌத்த கடைப்பிடி நெறிகள்
                சமயங்கள் பெரும்பாலும் தத்தம் கடைப்பிடி நெறிகளை இரண்டாக வகுத்துக் கொண்டன: 1. துறவியற் அறநெறிகள், 2. இல்லறத்தார் அறநெறிகள். பௌத்தக் கடைப்பிடி நெறிகளில் பெரும்பான்மையானவை இருவருக்கும் பொதுவானவை. காமவிழைவு நீக்கம் தவிர்த்த பிறவெல்லாம் பொது அறநெறிகளாகவே விளங்குதல் பௌத்தத்துக்கே உரிய பெருஞ்சிறப்பாகும் (இல்லற நெறியிலும் பிறன்மனை நயவாமை என்பது உண்டு). பௌத்தக் கடைப்பிடி நெறிகளைப் பின்பற்றுவதற்கான மெய்யியல் பின்புலத்தைத் தருவன நால்வகை வாய்மைகள். நால்வகை வாய்மைகளின்படி துன்பநீக்க வழிகள் என்னும் நான்காவது வாய்மையின் நெறிமுறைகள் தாம் பௌத்தக் கடைப்பிடி நெறிகள் ஆகும். அவை முறையே பஞ்சசீலம், எண்வகை சீலம், பத்துச் சீலம் பத்துபாரமிதைகள் போல்வன. இவையனைத்தும் வாழ்வியலைச் செம்மையாக்குவன.
                எவ்வுயிரும் தன்னுயிர்போல் நோக்கில்; (கொல்லாமை), (மணி. 13: 27-34), 16:84-85, 16: 116-117), தனக்குரிமையில்லா பிறர்க்குரிமைப் பொருளைத் திருடாமை (கள்ளாமை) (மணி, 23: 124-77), பிறன்மனை நோக்காப் பேராண்மை (காமமின்மை) (மணி. 5: 86-91, 16:76-79) எல்லாத் தீங்குகளுக்கும் காரணியான பொய் சொல்லாமை (பொய்யாமை) (மணி. 22: 61, 21: 20-3), மயக்கமும் மடிமையும் தரும் கள்வகை தவிர்த்தல் (கள்ளுண்ணாமை), என்றவாறு தொடரும் பல்வகைக் கடைப்பிடி நெறிகளும் பௌத்த வாழ்வியலுக்கான வழக்காறுகளாகும்.
பௌத்தக் கடைப்பிடி நெறிகள்
                பௌத்த சீலங்களைப் பின்பற்றுவதற்கு வாழ்வியல் நல்வினை, தீவினை அறிந்து தீவினை ஒழித்து நல்வினையாற்றல் வேண்டும். தீவினைகளின் எதிர்நிiலை நல்வினை: நல்வினைகளின் எதிர்நிலை தீவினை என்றும புரிதலின் அடிப்படையில் கடைப்பிடிநெறிகள் அமையும்.
தீவினைகள் 10 நிலைகளில் 3 வகைகளில் மனிதனைப் பற்றுகின்றன:
உடலால்        -              3              -              கொலை, களவு, காமம்
வாயால்        -              4              -              பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்வொல்
மனதால்        -              3              -              வேட்கை, வெகுளி, பொல்லாக்காட்சி
                                                                                                (மணி., xxx ஐஐ : 66-77)
                தீவினை 10-ம் நீங்கி அதன் மறுதலை எதிர்நிலையைப் பின்பற்றினால் அதுவே நேர்நிலை நெறியாகும். நல்வினை 10 குறித்து ஆகம சூத்திரம் பேசுவதை மணிமேகலை அப்படியே பேசுகிறது. (மணி :11: 76-81)

                பௌத்தக் கடைப்பிடி நெறிகள் அனைத்தையும் முழுமையாகமுறையாகப் பதிவுசெய்துள்ள ஒரே தமிழ் இலக்கியம் மணிமேகலையாகும். இந்தவகையில், மணிமேகலை ஒரு பௌத்தக் களஞ்சியமாகத் திகழ்கிறது.
பௌத்தத் தெய்வங்கள்
                பௌத்த வாழ்வியலின் முன்மாதிரிகளாக பௌத்த தெய்வங்கள் விளங்குகின்றன. ஹீனயான பௌத்தத்தில் இல்லாத இந்த தெய்வ உருவாக்கங்கள் மகாயான பௌத்தத்தால் உருவாக்கப்பட்டவை. மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலா தெய்வம் உட்பட பல தெய்வங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் பெண் தெய்வங்களும் உள்ளன; ஆண் தெய்வங்களும் உள்ளன.
பெண் தெய்வங்களாவன
                மணிமேகலா தெய்வம், தீவதிலகை, சாம்பாபதி, மணிமேகலை, சிந்தாதேவி, கந்திற்பாவை, கண்ணகி ஆகியோர்.
ஆண் தெய்வங்களாவன
                புத்தன், இந்திரன், சாத்தன், தருமராசன், அறவணஅடிகள், புண்ணியராசன், சங்க தருமன், கோவலன், மாரன் ஆகியோர்.
                பெண் தெய்வங்களில் மணிமேகலா தெய்வம் கடற்தெய்வமாக வழங்கப்படுகிறது. அதிலும் கடல்திசை காட்டும் தெய்வமாக இயங்குகிறது. மணிமேலைக் காப்பியத்தினதும் பௌத்த சமயத்தினதுமான முதன்மை நோக்கம் பசி ஒழிப்பே. இந்தப் பசி ஒழிப்புக்கு உரிய அமுதசுரபியை மணிமேகலைக்குச் சொன்னது இந்த மணிமேகலா தெய்வமே. கடலில் தத்தளிப்போருக்குத் திசைகாட்டுவதுபோலப் பசியில் துன்புறுவோர்க்கு உணவுதந்து பசியமர்த்தும் கலங்கரை விளக்கமாக மணிமேகலை தானே விளங்குகிறாள். பௌத்தச் ஜாதகக் கதைகளின் இரண்டினில் மணிமேகலா தெய்வத்தின் கதை இடம்பெற்றுள்ளது. அவைமுறையே, சங்கா ஜாதகா, மகாஜனக ஜாதகா ஆகியவை.
                சங்கா ஜாதாகவில் வரும் மணிமேகலா எனும் கடல் தெய்வம் குறித்த கதை வருமாறு:
                “மோலினீ என்னும் வாரணாசியில் ஒரு பிராமணன். அவன் பெயர் சங்கா. அவன் தானம் செய்வதற்காகச் சுவன்ன பூமிக்குப் போனான் (சுவன்னாபூமிதங்கநாடுபர்மாவாக இருக்கலாம்). கப்பல் கவிழ்ந்தது. ஏழுநாள் கடலில் தத்தளித்தான். அப்போது மணிமேகலா தெய்வத்திடம் நான்கு கடவுளரும் சொன்னார்கள்:
கப்பலில் போகிறவர்கள் நல்லொழுக்கம் செய்தவர்களாகவோ தந்தை தாயை வணங்கியவர்களாகவோ இருந்தால் நீ அவர்களைக் காப்பாற்று
மணிமேகலா தெய்வம் சங்கா முன்பு தோன்றியது. புனித உணவு தந்தது. அத்தோடு, கப்பலில் ஒரு நல்ல பொருள்களை நிரப்பியது. மோலினீ வந்து சேர உதவியது
                (மொழிபெயர்ப்பு கட்டுரையாளருடையது, ளூர ர்மைழளயமய. 1989: 170)
மகா ஜனகா ஜாதகாவில் வரும் மணிமேகலா எனக் கடல் தெய்வம் குறித்த கதை வருமாறு:
                ‘மகா ஜனகா இளவரசன் வடஇந்திய மிதிலையை ஆண்ட மகா ஜனகாவின் மூத்த மகன், பொருள்திரட்ட சுவன்ன பூமிக்குக் கப்பலில் போனான். 7ஆம் நாள் கப்பல் கவிழ்ந்தது; மூழ்கியது. 7 நாள் கடலில் மிதந்தான். அந்நேரம் கடவுள்களின் தங்கை மணிமேகலா தெய்வத்தைக் கடற்காவலாளியாக நியமித்தனர், உவகைக் காக்கும் நான்கு கடவுளரும், அவளிடம் சொன்னார்கள்:
                “எவரொருவர் நல்லொழுக்க நிலையொடு அவர்தம் தாயையும் அவரையொத்தவரையும் பாதுக்காக்கிறாரோ அவர்கள் கடலில் மூழ்கத் தக்கவரல்லர்; அவர்கள் காப்பாற்றப்பட வேண்டியவர்கள்”.
            ஏழு நாளும் மணிமேகலா தெய்வத்தால் கடலுக்குள் இளவரசர் மகாஜனகாவைக் காண இயலவில்லை. பிறகொருநாள், நடுக்கடலில் அவனைக் கண்டு கரையேற்றினாள்; மிதிலைக்கு அனுப்பி வைத்தாள் - பத்திரமாக
                (மொழிபெயர்ப்பு கட்டுரையாளருடையது, ளூர ர்மைழளயமய. 1989: 170)
            இவ்விரு கதைகளும் மணிமேகலா தெய்வம் ஒரு கடல்காவல் தெய்வமாக இருந்ததான வழக்காறு ஒன்றை அறியத்தருவதோடு, வாணிகனாகச் சென்ற சங்கா, மகா ஜனகா இருவரும் சாதுவனை அடையாளப்படுத்துகின்றன என்பதையும் உணரத் தருகிறது.
பரப்புநீர் பௌவம் பலர்தொழக் காப்போள் (மணி. 25: 20) (மணி, 25: 184-191, 16: 14-16, 29:23-28, 5:96-105, 10:3-16, 10:79-91, 28:212-16, 29: 29-31)
            பௌத்தச் சிறுதெய்வ வழிபாட்டில் இடம்பெற்றுள்ள தாராதேவிதான் மணிமேகலா தெய்வமாக இங்கு வணங்கப்படுகிறாள் என்ற கருத்தும் உள்ளது. அதற்குப் பொருத்தமாக, தாராதேவி, என்பதில் உள்ளதாராஎன்னும் சொல்லுக்குக்கடலைக் கடத்தல்என்ற பொருள் வழங்கப்படுகிறது என்பதும் இங்கு அறியத்தக்க செய்தியாகும். இந்தச் செய்திகளையெல்லாம் அடிப்படையாகக் கொண்டுதான், மணிமேகலை நூலிலும் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலா கடல்தெய்வம் கடலில் திசைகேட்டுச் செல்கின்றவர்களுக்குத் திசை அறிவிப்பவளாக விளங்கினாள்என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தெளிவு.
            தீவதிலகை என்பது தீவுகளைக் காக்கும் தெய்வமாகப் பௌத்த வழக்காற்றில் உள்ளது. (மணி. 11: 27-29, 28: 212-215) மணிபல்லவத் தீவில் மணிமேகலைக்குஅமுதசுரபிபற்றிச் சொல்லிப் பெறச் செய்தவள் தீவதிலகை. எனவே, மணிமேகலையின் பசிஒழிப்புக் கோட்பாட்டுக்கான எடுகோளைத் தந்த தெய்வமாகத் தீவதிலகை விளங்குகிறாள்.
சம்பாபதி, அறவோர்களைக் காக்கும் தெய்வம. சம்பாதி என்பது காவிரிப்பூம்பட்டினத்தின் பழைய பெயர். இத்தெய்வம, தொன்மூதாட்டி, பொன்னிற் பொலிந்த நிறத்தான், முந்தைய முதல்வி, முதியான், முதுமூதாட்டி என்ற பலபெயர்களில் மணிமேகலையில் சுட்டப்பட்டுள்ளது. (மணி. 2: 1-3, பதிகம். 8)
சிந்தாதேவி என்பது வைதீகத் தெய்வமாகிய கலைமகளைப் பௌத்தம் தன்வயப்படுத்திக் கொண்ட தெய்வமாகும். ஆபுத்திரனுக்கு அமுதசுரபியை வழங்கியது இத் தெய்வம் (மணி. 14: 9-16, 14: 17-21, 15: 146-153)
            ஆண்தெய்வங்களில்இந்திரன்பல்சமயச் சார்புடைய தெய்வமாகும். இந்திரலோகம் எல்லா இன்பங்களும் கிடைக்கும் உலகம்; துன்பம் என்பதே சிறிதும் இல்லாத குதூகல உலகம். அந்த உலகத்தின் தலைவன் இந்திரன். எனவே, இன்பங்களின் தலைவன் இந்திரன். மண்ணுலகம் இப்படி மாறினால் தேவலாம் என்று கற்பனை செய்தோரின் கற்பித உலகம் இந்திரர் உலகம். இன்பங்கள் வேண்டா இதயம் உண்டோ? பௌத்தமும் இந்திரனை எடுத்துக் கொண்டது. மணிமேகலையில் இந்திரன், “தேவர் நன்னாட்டுக்கு இறைவன் ஆகிய பெருவிரல் வேந்தே” (14: 43-3), வானவர் தலைவன் (29:13), அமரர் தலைவன் (1:9) என்றவாறு பலவாறு விளக்கப்படுகிறான்.
            இத்தகைய இந்திரனின் தலைமையில் பல சிறு தெய்வங்கள் ஏவல் புரிந்தனர். அவர்களுள் சம்பாபதி, தீவதிலகை, மணிமேகலா தெய்வம் ஆகிய பெண் தெய்வங்கள் சிறப்பிடம் பெற்றனர்.
புகார் நகரில் முதன்முதலில் இந்திர விழாவைக் கொண்டாடிய வேந்தன் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் ஆவான். இந்திரவிழா 28 நாள்கள் நடத்தப்பட்டது. (1: 5-9)
            புத்தரின் கருணைச் செயலைச் சேகரிக்க வேண்டி அவரது இருவிழிகளையும் தருமாறு இந்திரன் வேண்டினான். வேண்டியவாறே கண்களை வழங்கினார் புத்தர். புத்தரின் கருணைச் செயலைக் கண்டு மனம் உருகி புத்த பக்தன் ஆனான் இந்திரன். இச்செய்தி, மணிமேகலை, வீரசோழியம், நீலகேசி முதலிய இலக்கியங்களிலும் புத்த ஜாதகக் கதைகளிலும் இடம்பெற்றுள்ளது. புத்த பக்தனான இந்திரன் மணிபல்லவத் தீவில் புத்த பீடிகை, ஒன்றை அமைத்து வணங்கியதோடு, தீவ திலகையைப் பீடிகைக்கும் காவல் தெய்வமாகவும் ஆக்கினான். (8:55, 11:27-29) (கந்தசாமி.,சோ.. 1977 : 37-38)
            புத்தரைஜினேந்திரன்என்று அழைக்கும் மரபைச் சாத்தனார் குறிப்பிட்டுள்ளார் (29:47). இந்திரன் புலனின்ப வேட்கையும் வேட்டையும் உடையவனாக அறியப்படுகிறான். இஃது ஒழித்தவர்; ஒழிந்தவர் புத்தர் என்பதால் அவரைச்ஜினேந்திரன்என்றனர். ஜினன் - வென்றவர்; புலன்களை வென்றவர்.
            சாத்தனார் வழிபாடு சங்ககாலம் முதல் தமிழ்ச் சமூகத்தில் நிலவி வருகிறது. சாத்தனார் என்பவர் அறநெறித் தெய்வம் என்ற கருத்தை; அறப்பெயர்ச் சாத்தன்என்ற புறநானூற்றுக் குறிப்பு காட்டுகிறது (புறநா. 395). சங்ககாலப் புலவர்கள்சாத்தன்என்னும் பின்னொட்டுப் பெயர்களில் 84 பாடல்களைப் பாடியுள்ளனர். புறநானூற்றில் மட்டுமே 10 புலவர்கள்சாத்தனார்எனும் பெயரில் இடம் பெற்றுள்ளனர் (பக்குபோதிபாலா.,ஜெயபாலன்.,.அன்பன்., . (பதி.), அறிவுராஜ்.,பி. 2013: 89). சிலப்பதிகாரத்தில் வரந்தருகாதையில் மங்கள மடந்தைக் கோட்டத்தில் காணப்படும் சாத்தனார் என்ற ஐயனார், பூரணை, புஷ்கலா என்ற இரு பெண் தெய்வங்களோடு காட்சியளிப்பதைக் காணமுடிகிறது.
            இத்தகைய சாத்தனார் தமிழிலக்கியப் பெரும்பரப்பிலும் நாட்டுப்புற வழிபாட்டிடங்களிலும் பரவி நிறைந்திருக்கும் போது மணிமேகலையில் மட்டும் சாத்தனார் வழிபாடு ஏன் இடம்பெறவில்லை என்பது ஆராய்ச்சிக்குரியது. ஒருவேளை, மணிமேகலையை இயற்றுவதே சீத்தலைச் சாத்தனார் தானே, தாமே காப்பியத்துக்குள் இடம்பெறுவது தற்சார்புத் தன்னமக்கு இடம் வகுக்கும் ஏன்று சாத்தனாரை விடுத்திருப்பாரோ சாத்தனார்?
முடிவுரை
1.            சங்க இலக்கியங்களில் வழிபாட்டுக் குறிப்புகளோடு தென்படும்                 பௌத்த வழக்காறுகளோடு மெய்யியல் வழக்காறுகளும்             இடம்பெற்றுள்ளன.
2.            அற இலக்கியங்களில் பௌத்த மெய்யியல் வழக்காறுகளின்                 வெளிப்பாட்டுக் கூறுகளின் அறவியல் வழக்காறுகள்         பதிவாகியுள்ளன.
3.            சிலப்பதிகாரத்திலும் வழிபாட்டுக் குறிப்புகளோடு பௌத்த                 வழக்காறுகள் இடம்பெற்றுள்ளன.
4.            மணிமேகலையில் பௌத்த வழக்காறுகளின் முழுமையைக்             காணமுடிகிறது.
5.            சங்க இலக்கியத்தில் பௌத்த வழக்காறுகள் இடம்பெற்றுத்        தோன்றி, அற இலக்கியத்தில் வாழ்வியல் வழக்காறுகளாக      வளர்ந்து, மணிமேகலையில் பௌத்தம் மெய்யியல், அறவியல்                 களஞ்சியமாக மிளிர்ந்து விளங்குவதை அறியமுடிகிறது.
பயன்பட்ட நூல்கள்
1.            ஆனந்தராசன்.,ஜே. 2007, பவுத்தமும் பழந்தமிழ்க் குடிகளும், அன்றில்                 பதிப்பகம், 192(14) செகசீவன்ராம் சாலை, சேப்பாக்கம், சென்னை-5
2.            கந்தசாமி., சோ.. 1977, பௌத்தம், டாக்டர் எஸ்.இராதகிருஷ்ணன்                 மெய்யுணர்வு  மேல் நிலைக்கல்வி நிறுவனம், சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை.
3.            செல்லன் கோவிந்தன்.,2001, மணிமேகலையின் காலமும் கருத்தும்,                 .ராஜேஸ்வரி, ஓஐஏஃ103, விஸ்வகர்மாபுரம், சித்தூர், பாலக்காடு,     கேரளா, -678 101.
4.            பிக்கு போதிபாலா, ஜெயபாலன்., . அன்பன்.,. 2013, தமிழ்ப்   பண்பாட்டில் பௌத்தம், காவ்யா, கோடம்பாக்கம், சென்னை.
5.            மாதவன்.,சு. 2012, புறநானூற்றில் பௌத்தச் சிந்தனைகள், ஆய்வுச்                 சிந்தனைகள், கருணாகரன்.,.(பதி.), ஐந்தமிழ் ஆய்வாளர் மன்றம்,        மதுரை.
6.            மாதவன்.,சு. 2008, தமிழ் அற இலக்கியங்களும் பௌத்த, சமண        அறங்களும், செம்மொழி, தஞ்சாவூர்.
7.            Shu Hikosaka., 1989, Buddhism in Tamil Nadu: A New Perspective,    Institute of Asian Studies, Chennai.
.

***** திராவிட பல்கலைக் கழக தமிழ் மொழித்துறை நடத்திய செம்மொழி கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை. ஏப்ரல், 2013.




No comments:

Post a Comment