Thursday 24 March 2016

லெட்ச லெட்சமாய்ப் பிறப்போம் ! லெட்சியக் கல்புர்கிகளாய்.....

28 நவம்பர் 1938 - பேராசிரியர் கல்புர்கி பிறந்த நாள் லெட்ச லெட்சமாய்ப் பிறப்போம் ! லெட்சியக் கல்புர்கிகளாய்..... ஒருநாளில் பிறந்து ஒருநாளில் இறக்கும் மானிடருள் ஒருநாளில் இறந்து ஒவ்வொருநாளும் பிறந்துகொண்டிருக்கும்படிப் பிறந்தவனே ! கல்புர்கி! அன்று ஒருவனாய்ப் பிறந்தாய்.... இன்று இலட்சக் கனல்களாய்ப் இலட்சிய அனல்களாய்ப் பிறந்துகொண்டே இருக்கிறாய் ...! வருணத்தை எதிர்த்த லிங்காயத்துக்காரர்களை வைத்தே வருணத்தை எதிர்த்த உன்னைக் கொலைசெய்ய வைத்ததே வருணாசிரமதர்மம் ! மனுதர்மம் !! மருந்துக்குக்கூட தர்மமில்லாதது மனுதர்மம் ..... நீ உயிர் விட்டாயல்லை .. பயிர் நாட்டை....! இல்லாததெல்லாம் இருக்கிறது ... இருக்கிறதெல்லாம் இல்லை... இதுதான் மதவாதம் ..... மதிவாதம் ஏற்காதது மதவாதம் ... அதனால்தான் உன்னை ஏற்கவில்லை ... உருவான மதங்களெல்லாம் உருவில் இல்லை ... கருவே இல்லாதது உருவாகிவிட்டது ... உருவமே இல்லாமல் சாகடிக்கும் பேய் சாதிமதம் .... பாம்பு உயிர்வாழக் காட்டில் இடந்தரலாம் ... நாட்டில்?! மதவாதப் பாம்பின் உயிர் சாதியவாதப் புற்றுக்குள் .... முட்டாள்தனத்தின் பிள்ளை மதவாதம்.... மிருகத்தனத்தின் பிள்ளை சாதீயவாதம்... முட்டாள்தனம் - தாய் மிருகத்தனம் - சேய் தாயும்சேயும் இணைந்துபெற்ற பேதமைத்தனம் - நோய் .... ஒன்றையொன்று பெற்றெடுக்கின்றன- முட்டாள்தனமும் மதவாதமும்.... ஒன்றையொன்று பாலூற்றுகின்றன - மிருகத்தனமும் சாதீயவாதமும்.... இரண்டுக்கும் அறிவு என்றாலே பேதபேதம் ... காததூரம் ... இரண்டுமே அறிவோடு என்றுமே மோதும்மோதும்... போதும்போதும்... சாதிமதவெறி சாகடித்தது ஒரு கல்புர்கியைத்தான் ... இலட்சிய உயிர்நெருப்போடு நாளும் நாளும் எழும் இலெட்சக் கணக்கான கல்புர்கிகள் சாதிமதவெறியை சாகடிப்பார்கள் .... - ஏழைதாசன் , புதுக்கோட்டை ( முனைவர் சு. மாதவன் ) பேச : 9751330855

No comments:

Post a Comment