Thursday 24 March 2016

சாதியக் கண்ணோட்டம் அன்றும் இன்றும் '

சாதியக் கண்ணோட்டம் அன்றும் இன்றும் ' என்ற அனன்யா வாஜபேயி யின் கட்டுரை மிகுந்த சமூகப் பொறுப்புணர்வோடு எழுதப்பட்டுள்ளது. பாராட்டுக்கள் . இந்தக் கட்டுரை மேலும் பல சாதிவெறிசார்ந்த நிகழ்வுகளைக் கிளறுகிறது. ஒரு நல்ல படைப்பின் சிறந்த பண்பும் அதுதான் . வர்ணாசிரம தர்ம படித்தரநிலையில் நால்வர்ணம் எனக் குறிப்பிடப்படும் மனிதர்கள் பட்டியலிலேயே இடம்பெறாதவர்கள் பஞ்சமர்கள். இந்தப் பஞ்சமர்கள்தான் இந்தியாவின் ஒற்றைப் பெரும்பான்மை மக்களாவர். அப்படியென்றால் , இவர்களும் இந்தியாவின் ஆதிகுடிகளுள் அடங்குவர். அடக்கப்பட்டோரிலும் அடங்குவர். இவர்களை மனிதர்கள் என்ற நிலையிலேயே பார்க்காத வர்ணாசிரமதர்மம் எப்படியெல்லாம் பாடாய்ப்படுத்தும் எனச் சொல்லவேண்டியதில்லை. வேடர்குலத்தவனான ஏகலைவன் நிலையை மகாபாரதக் கதை சொல்கிறது.அவனது கட்டைவிரலைக் குருதட்ச்னையாகப் பெற்ற குரூரத் துரோகாச்சாரியார் ( துரோணாச்சாரியாரை) பெயரால் வீரதீரச் சாதனையாளர்களுக்குத் " துரோணாச்சாரியார் விருது " கொடுத்துவருகிறது இந்திய அரசாங்கம். இதன் பொருள் என்ன ? அடிப்படையில் இன்னும் வர்ணாசிரமதர்மத்தைப் பின்பற்றித்தான் இந்திய அரசே செயல்படுகிறது என்பதுதானே ?! என்றைக்கு துரோணாச்சாரியார் விருதின்peyarai " ஏகலைவன் விருது " மாற்றுகிறோமோ அன்றுதான் இந்தியா உண்மையிலேயே சமத்துவப் பாதையில் நடைபோடுகிறது என்று பொருள். இதுமட்டுமா? காந்தி, நேரு , திலகர்,நேதாஜி, காமராசர் என எல்லோரின் பெயரையும் எல்லோரும் வைத்துகொள்கிறோமே! தாழ்த்தப்பட்ட சாதி அல்லாதச் ஏதேனும் ஒரு சாதிக்காரனாவது இதுவரை தன பிள்ளைக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டிப் பெருமிதம்கொண்டிருக்கிறானா?! இல்லையே?! அரசியல் சாசன வரைவுக்குழுவுக்குத் தலிவராக இருந்த ஆனானப்பட்ட அம்பேத்கரையே இன்னும் எஸ்.சி.யாகப் பார்க்கும் சமூகம் எந்தக் காலத்தில் குப்பனையும் சுப்பனையும் சக மனிதனாக ஏற்கப்போகிறதோ என்னும் கவலை இன்னும் எத்தனை நூற்றாண்டு தொடருமோ என்ற ஆதங்கமும் ஏக்கப்பெருமூச்சும்தான் நீடித்துக்கொண்டே இருக்கிறது . மாறும்தான் ... எப்பொழுது என்பதுதான் தெரியவில்லை .?! --- முனைவர் சு. மாதவன், உதவிப் பேராசிரியர் - யு.ஜி.சி. ஆர்.ஏ. , மா.மன்னர் கல்லூரி ( தன்னாட்சி), புதுக்கோட்டை . பேச : 9751 330 855

No comments:

Post a Comment