Wednesday 18 January 2023

ஒரு நாள் ; ஒரு நூல் - 11. புத்தர் வசனம் - ஆங்கிலத்தில் : எஸ்.தம்மிகா, தமிழில்: தி.சுகுணன், 11.01.2023

11.01.2023 ஒரு நாள்; ஒரு நூல் - 11 புத்தர் வசனம் ( புனித பெளத்த இலக்கியத்திலிருந்து தினசரி படிக்க வேண்டியவை ) -- ஆங்கிலத்தில் : எஸ்.தம்மிகா , தமிழில்: தி.சுகுணன் சென்னை, நாம் தமிழர் பதிப்பகத்தின் முதற் பதிப்பாக ஏப்ரல் 2007 இல் வெளிவந்த நூல் இது. இந்நூல் 216 பக்கங்களைக் கொண்டது. பெளத்தத்தின் மூன்று புகலிடங்கள் புத்தம், தம்மம், சங்கம் ஆகியன. இம் மூன்றும் வடிவமைத்துத் தந்துள்ள அறநெறிகளினடிப்படையில் வாழ்வியலைத் தகவமைத்துக் கொள்வதே பெளத்த வாழ்வியல் ஆகும். இத்தகைய வாழ்வியலில் விரும்பும் ஒருவர் ஆண்டின் 365 நாள்களில் ஒவ்வொரு நாளும் மனங்கொள்ளத்தக்க பெளத்த வாழ்வியல் கடைப்பிடி நெறிகளை - சிந்தனைகளைத் தொகுத்து வழங்கும் நூலாக இந்நூல் விளக்குகிறது. இந்த அடிப்படையில் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை ஒவ்வொரு நாளுக்கும் உரிய சிந்தனைகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. இச் சிந்தனைகளில் சில சிந்தனைகள் வெகு எளிய சிந்தனைகளால் அதாவது ஒரு சராசரி மனிதர்கூடத் தானே சிந்திக்கக்கூடியனவாக உள்ளன. இவையெல்லாம் புத்தரின் சிந்தனைகளா என்று தோன்றும்வண்ணம் சில உள்ளன. ஆனால் நூலின் பெரும்பான்மையான சிந்தனைகள் மனித மனங்களை ஒழுங்கமைக்கும் ஆற்றல் வாய்ந்தனவாக உள்ளன. இன்றைய சிந்தனைக்காக இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள சிந்தனை இதோ : ஜனவரி 11 " இந்தக் கோட்பாடுகள் வழிநடத்திச் செல்லவில்லை ; தியாகம் செய்யச் சொல்லவில்லை ; அசைவற்ற நிலையை மாற்றவில்லை ; அமைதி- எழுச்சியைக் கொடுக்கவில்லை ; நிர்வாண நிலைக்கு அழைத்துச் செல்லவில்லை என்று நீங்கள் கூறினால் அவை அறம் இல்லை என்று நீங்கள் உறுதியாக நம்பலாம் .அவை போதனைகள் அல்ல .அவை ஆசிரியரின் வார்த்தைகளும் அல்ல . ஆனால் எந்தக் கோட்பாடுகள் , போதனைகள் வழிநடத்திச் செல்கின்றன; அமைதியை -தியாகத்தை - போதிக்கின்றன; இயங்க வைக்கின்றன; மன நிம்மதியைக் கொடுக்கின்றன; மேலான அறிவைக் கொடுக்கின்றன; எழுச்சி கொடுக்கின்றன ; நிர்வாண நிலைக்கு அழைத்துச் செல்கின்றன என்று நீங்கள் கூறுகிறீர்களோ அதையே உண்மையான அறம் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம் . அவையே ஒழுக்க நெறிகள் ;அவையே ஆசிரியரின் போதனைகள். " இவ்வாறான ஒவ்வொரு நாளுக்குரிய சிந்தனைகளும் நல்ல மனநிலையையும் நல்ல வாழ்நிலையையும் கொடுக்கவல்லன என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்நூலை ஆங்கிலத்தில் படைத்தளித்துள்ள எஸ்.தம்மிகா என்பவர் ஒரு பெளத்தப் பிக்கு ஆவார். எனவே, தான் பிக்கு ஆவதற்கு மனதைச் செம்மை செய்யப் பயன்பட்ட அறவியல் சிந்தனைகளைப் பிறரும் பயன்கொள்ளும் வண்ணம் அழகுறத் தொகுத்தளித்துள்ளார். இந்நூலைத் தமிழில் தி.சுகுணன் அவர்கள் தெளிவாக மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இந்நூலைத் தொகுத்தளிக்கும் வாழ்வியல் தகுதியுடையவராக இவர் விளங்குகிறார் ; எவ்வாறெனில், தான் படிக்கிறோம் ; பின்பற்றுகிறோம் ; மற்றவர்க்குக் கற்பிக்கிறோம் என்பதோடு தன் குடும்பத்தினரையும் பண்படுத்திப் பெளத்த நெறியில் ஆற்றுப்படுத்துபவராகத் திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தன் குழந்தைகள் நால்வரில் மூவருக்கு பெளத்தப் பெயர்களைச் சூட்டிக் கொள்கைநெறியில் ஆற்றுப்படுத்துபவராகத் திகழ்கிறார் இவர். ஆம். இவரின் பிள்ளைகளின் பெயர்கள் முறையே, சு.கெளதமன், சு.அண்ணாதுரை, சு.அசோகன், சு.சங்கமித்ரா என்பனவாகும். இந்நூலின் மூலநூலில் ஒவ்வொரு நாளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள சிந்தனைகளுக்குமான நூல் மேற்கோள் சான்றுக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளனவா என்று தெரியவில்லை. அவ்வாறு இருந்தால் இனிவரும் தமிழ்ப் பதிப்புகளில் அவற்றைக் கொடுப்பது நலமாகும். பதிப்பக முகவரி: நாம் தமிழர் பதிப்பகம், 6/16, தோப்பு வேங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005 பேச : 044- 2944 3791, 94440 82232 முதல் பதிப்பு : ஏப்ரல் 2007 விலை : ரூ.80/-

No comments:

Post a Comment