Friday 27 January 2023

ஒரு நாள்; ஒரு நூல் - 21. பெளத்தத் தத்துவ இயல் - ராகுல சாங்கிருத்யாயன்.21.01.20231

21.01.2023 ஒரு நாள் ; ஒரு நூல் - 21 பெளத்தத் தத்துவ இயல் - ராகுல் சாங்கிருத்யாயன்.... தமிழில் : ஏ.ஜி.எத்திராஜூலு, ஆர்.பார்த்தசாரதி ( ஆர்.பி.எஸ்.) சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி ) லிட்., வெளியீடாக இரண்டாம் அச்சாக ஜனவரி 2003 இல் வெளிவந்த நூல் இது. இந்நூல் 8 + 240 = 248 பக்கங்களைக் கொண்டுள்ளது. (இந்நூல் இதே பதிப்பகத்தின் வாயிலாக முதல் பதிப்பாக ஆகஸ்ட் 1985 இல் வெளிவந்துள்ளது.) இந்தியத் தத்துவங்களிலும் உலகளாவிய த்த்துவங்களிலும் சமூகவியலிலும் மானுட வரலாற்றியலிலும் ஆழ்ந்தகன்ற... நுண்மாண்நுழைபுலம் மிக்க... தெளிவான பேரறிஞர் ராகுல்ஜி என்பதை அறிந்தார் யாவரும் அறிவர். அறியாதார் யாராயினும் ராகுல்ஜியின் நூல்களைப் படிக்கத் தொடங்கிவிட்டால் இதையே உணர்வர். மேற்கண்ட துறைகளில் அறிவும் செறிவும் தெளிவும் பொலிவும் பெற விரும்புவோர் யாராயினும் படிக்க வேண்டிய இன்றியமையாத படைப்புகள் இவருடைய படைப்புகள் ஆகும். இத்தகைய பெருந்தகையின் சீரார்ந்த நூல்களுள் ஒன்றே இந்நூலுமாகும். பௌத்த ஆய்வுகளில் ஈடுபடும் எவர் ஒருவரும் இந்நூலை பயிலாமல் நூலின் கருத்துக்களை உள்வாங்காமல் இந்நூலின் அணுகுமுறையை பின்பற்றாமல் ஆய்வில் ஈடுபடுவார ஈடுபடுவார்கள் என்றால் அந்த ஆய்வு குறை உடைய ஆய்வாக பாரு இருக்கும் அந்த அளவிற்கு ஆய்வு நோக்கு ஆய்வு அணுகுமுறை ஆய்வு நெறிமுறைகள் ஆகியவற்றை மார்க்சியை இயங்கியல் அடிப்படையில் முன் வைக்கும் அரிய நூல் என் நூலாகும். இந்நூலின் பொருளடக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது: அத்தியாயம் ஒன்று 1.கௌதம புத்தரின் அடிப்படை தத்துவங்கள் - 1 1. கடவுளை ஒப்புக்கொள்ளாமல் இருப்பது - 2 2.ஆன்மாவை நிரந்தரமானதாக ஒப்புக் கொள்ளாமல் இருப்பது - 6 3.எந்தவொரு நூலையும் கடவுள் அருளியதாக ஒப்புக்கொள்ளாமல் இருப்பது - 15 4. வாழ்க்கை பிரபாகத்தை இந்த உடலில் முன்னும் பின்னும் என்று நம்புவது - 19 அத்தியாயம் இரண்டு கௌதம புத்தர் - 24 1.வாழ்க்கை - 24 2. பொதுவான கருத்துக்கள் - 27 3. நான்கு ஆரிய சத்தியங்கள் - 28 4.தத்துவ கருத்துக்கள் - 38 5.புத்தரின் தத்துவமும் அக்காலத்திய சமுதாய அமைப்பும் - 54 அத்தியாயம் மூன்று நாகசேனர் - 64 1.சமூக நிலைமை - 64 2.கிரேக்க இந்திய தத்துவங்களின் சங்கமம் - 67 3..நாகசேனரின் வாழ்க்கை - 68 4..தத்துவ கருத்துக்கள் - 70 அத்தியாயம் நான்கு பவுத்த மதப் பிரிவுகள் - 80 1. பவுத்த மதச் சம்பிரதாயங்கள் - 80 2.பவுத்த தத்துவப் பிரிவுகள் - 82 3.நாகார்ஜுனரின் சூனியவாதம் - 84 4.யோகாசாரமும் மற்ற பவுத்த தத்துவங்களும் - 88 அத்தியாயம் ஐந்து 1.பவுத்த தத்துவத்தின் உயர்மட்ட வளர்ச்சி - 91 1.அசங்கர் - 91 1..வாழ்க்கை - 92 2.அசங்கரின் நூல்கள் - 93 3.தத்துவ சிந்தனை - 93 2. திக் நகர் - 98 3. தர்மகீர்த்தி - 99 1.வாழ்க்கை - 99 2 .நூல்கள் - 101 3. தத்துவ சிந்தனை - 101 4.சமணர்களின் அனேகாந்த வாதத்திற்கு கண்டனம் - 133 அனுபந்தம் 1 1.புத்தரின் முற்காலத் தத்துவ மேதைகள் - 135 2.புத்தரின் முற்காலத் தத்துவ மேதைகள் - 137 3.புத்தர் காலத்துத் தத்துவ ஆசிரியர்களும் பிற்காலத் தத்துவ ஞானிகளும் - 138 துணை நூல்கள் - 151 அனுபந்தம் - 2 வஜ்ராயணத்தின் தோற்றமும் எண்பத்து நான்கு சித்தர்கணமும் - 152 அத்தியாயம் ஒன்று ,கௌதம புத்தரின் அடிப்படை தத்துவங்கள் என்னும் தலைப்பில் பின்வருமாறு தொடங்குகிறது : " புத்தருடைய மூன்று எதிர்ப்பு தத்துவங்களையும் ஒரு அங்கீகாரத் தத்துவத்தையும் தத்துவத்தையும் மொத்தம் கீழ்க் காணும் நான்கு தத்துவங்களையும் அறிந்துகொண்டால் அவருடைய உபதேசங்களைப் புரிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும். 1. கடவுளை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது. கடவுள் என்பதை ஏற்றுக் கொண்டால் 'மனிதன் தனக்குத்தானே எஜமானன்' என்னும் சித்தாந்தத்தை எதிர்ப்பதாகிவிடும் 2.ஆன்மாவை நிரந்தரமானது என்று ஒப்புக் கொள்ளாமல் இருப்பது. ஆன்மாவைச் சாஸ்வதமானதாக ஒப்புக்கொண்டால் பிறகு அதன் புனிதத்திற்கும் முக்திக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விடும். 3.எந்த ஒரு நூலையும் கடவுள் அருளியதாக ஒப்புக்கொள்ளாமல் இருப்பது. அப்படி ஒப்புக்கொண்டால் அறிவையும் அனுபவத்தையும் எதற்குமே ஆதாரமாகக் கொள்ள முடியாமல் போய்விடும். 4. வாழ்வின் பிரவாகத்தைத் தற்போதைய உடலுக்கு மட்டுமே சொந்தமாகக் கருதாமல் இருப்பது. அப்படிக் கருதினால் வாழ்வும் அதன் பல்வேறு அம்சங்களும் காரண காரிய விதிகளின்படி தோன்றியவையாக இல்லாமல் வெறும் திடீர் நிகழ்ச்சிகளாகிவிடும் " ( ப.1 ) இந்த நான்கு தத்துவங்களையும் தெளிவாகப் புரிந்துகொண்டால் புத்தரின் தத்துவங்கள் அத்தனையையும் முழுமையாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்ள முடியும் . இதை இந் நூலின் முதல் பக்கத்திலேயே அழகாகத் தொகுத்து வழங்கி உள்ளார் ராகுல்ஜி. புத்தரின் தத்துவங்கள் எங்கும் இந்த நான்கு தத்துவங்களும் அடங்கி இருப்பதைப் பயில்கிற ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள முடியும். இந்த நூலிலும் அத்தகைய போக்கு ஊடாடி உயிரோடி இழையோடி நிற்கிறது. கௌதம புத்தர் என்னும் தலைப்பில் அமைந்துள்ள அத்தியாயம் இரண்டில், சித்தாந்த கௌதமராய்ப் பிறந்த புத்தர் புத்தராய் மலர்ந்து ஞானம் பரப்பிய அவரின் வரலாறு முழுவதும் அவரின் மெய்யியல் பின்னணிகளோடு விளக்கப்பட்டுள்ளது. "அழிவுடையவை, துன்பம், ஆன்மா இல்லை " இத்தொடரிலேயே புத்தரின் தத்துவம் எல்லாம் அடங்கி விடுகிறது" ( ப.38 ) என்று ஓர் இடத்தில் எழுதிச் செல்கிறார். உண்மை இதுதான். இவற்றை விவரித்து விளக்கி நுண்பொருள் கண்டு அறிந்து கொள்கிறபோது இந்தத் தொடரின் ஆழமும் நுட்பமும் நமக்கு நன்றாகப் புலப்படும். நாகசேனர் என்னும் தலைப்பிலான அத்தியாயம் மூன்றில், நாகசேனர் பௌத்த தத்துவத்தை எவ்வெவ்வாறு விளக்கியுள்ளார் என்கிற செய்திகள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. பவுத்த மதப் பிரிவுகள் என்னும் தலைப்பிலான அத்தியாயம் நான்கில், பவுத்த மதம் தொடக்கத்தில் மகா சாங்கிக், ஸ்தவிரவாதம் என்ற இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து அதற்குப் பின்னர் 125 ஆண்டுகளில் ஸ்தவிரவாதம் 12 பிரிவுகளாகவும் மகாசாங்கிக் ஆறு பிரிவுகளாகவும் ஆகிவிட்டதையும் அப்பிரிவுகள் முன்வைக்கும் தத்துவப் பிரிவுகளையும் தத்துவக் கருத்துக்களையும் விளக்குகிறது. குறிப்பாக , பௌத்தர்களின் நான்கு தத்துவ பிரிவுகளான சர்வாஸ்திவாதம், சௌந்திராந்திகம், யோகாசாரம், மாத்யாமிக் ஆகியவற்றை விரிவாக இந்த இயல் விளக்குகிறது. மேலும் இவ்வியலில் சூனியவாதம் என்னும் தத்துவ வழியை முன்வைத்த நாகார்ஜுனர் , விஞ்ஞானவாதம் என்னும் யோகாசார மரபைச் சார்ந்த அசங்கர், வசுபந்து,தர்ம கீர்த்தி ஆகியோரின் கருத்துக்கள், வெளிப்பொருள் வாதம் என்னும் சவுந்திராதிகக் கருத்துக்கள், வெளி- உள்பொருள் வாதம் என்னும் சர்வாஸ்திவாதம் முன்வைத்த சங்க பத்திரர், வசுபந்து ஆகியோரின் கருத்துக்கள் ஆராயப்பட்டுள்ளன. பவுத்தத் தத்துவத்தின் உயர்மட்ட வளர்ச்சி என்னும் தலைப்பிலான அத்தியாயம் ஐந்தில், அசங்கர் (கி.பி.350), திக்நாகர் (கி.பி.425 ), தர்ம கீர்த்தி ( கி.பி. 600 ) ஆகியோரின் மெய்யியல் விளக்கங்கள், தருக்கவியல் நுட்பங்கள் ஆகியவை அழகுற விளக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஐந்து இயல்களில் அமைந்துள்ள இந்த நூலில் அனுபந்தங்கள் என்னும் பின்னணிப்புகளாக இரண்டு பெரும் கட்டுரைகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஐந்து இயல்களையும் அவற்றில் உள்ளடங்கும் பௌத்த மெய்யியல் சிந்தனைகளையும் பௌத்த மெய்யியல் உருவாக்கப் பின்புலங்களையும் புத்தர் காலத்திற்கு முன்பும் புத்தர் காலத்திலும் புத்தர் காலத்திற்குப் பின்பும் அதாவது புத்தரின் முற்காலம், புத்தரின் தற்காலம், புத்தரின் பிற்காலம் ஆகிய முப்பெரும் காலகட்டங்களிலும் இந்தியாவில் விளைந்திருந்த பல்வேறு மெய்யியல் பின்புலங்கள் எவ்வாறு பௌத்தத்தின் மெய்யியல் மறுமலர்ச்சிக்குக் காரணங்களாக அமைந்திருந்தன என்பதை இந்த இரண்டு பின்னிணைப்புக் கட்டுரைகளும் விளக்குகின்றன. ஐந்து இயல்கள் கொண்ட இந்த நூல் 134 பக்கங்களில் அமைந்திருக்க அதே அளவிலான நூலின் செம்பாதிப்பகுதியை இந்த இரண்டு பின்னிணைப்புகளும் கொண்டிருக்கின்றன. இதிலிருந்து இரண்டு பின்னிணைப்புகளின் இன்றியமையாமை குறித்து நாம் அறிய முடியும். அத்தகைய பின்னிணைப்புகள் எனப்படும் அனுபந்தங்கள் இரண்டும் பின்வருமாறு : புத்தரின் முற்காலத் தத்துவ மேதைகள் என்னும் தலைப்பிலான அனுபந்தம் ஒன்றில் புத்தரின் முற்காலத் தத்துவ மேதைகளான சார்வாகர், அஜித கேச கம்பளர் - லோகாயதவாதி (கி.மு.523 ), மக்கலி கோஷால் - செயலாற்றாதவாதி (கி.மு. 523 ), பூரண காசியபர் - செயல் இல்லாத தத்துவவாதி ( கி.மு.523 ), பிரக்ரூத் கர்யாயனர் - நிரந்தரப் பொருள் வாதி (கி.மு.523 ), சஞ்சய பே லட்ட புத்தர் (கி.மு.523 ) வர்த்தமான மகாவீரர் - எல்லாமும் அறிந்த வாதம் ( கி.மு. 569 - 485 ) ஆகியோரின் மெய்யியல் சிந்தனைகள், அவை இந்திய மெய்யியல் சிந்தனை மரபில் பெறும் இடம், அவை பௌத்த மெய்யியல் சிந்தனைகளுக்கு உதவிய கூறுகள் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன. வஜ்ராயணத்தின் தோற்றமும் எண்பத்து நான்கு சித்தர்கள் என்னும் தலைப்பிலான அனுபந்தம் இரண்டில் , பௌத்த சமயத்தின் முக்கியப் பிரிவாக பிற்காலத்தில் உருவான வஜ்ராயணம் என்ற பௌத்தத் தத்துவப் பிரிவு குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த வஜ்ராயண மரபில் தோன்றிய 84 சித்தர்கள் குறித்த செய்திகள் அழகாக விளக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தொடர்ந்து கீழைநாடுகளில் பௌத்த மறுமலர்ச்சி என்கிற தலைப்பில் பௌத்தம் பல்வேறு நாடுகளில் பரவிய செய்திகள் , பௌத்த மதத்தைப் பரப்பிய பௌத்த அறிஞர்கள், பிக்குகள் ஆகியவற்றைப் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி உள்ளார். மங்கோலியா, திபெத்து, சீனா, கொரியா , இந்தோனேசியா, ஜப்பான், தாய்லாந்து , சிலோன் ஆகிய நாடுகளில் பௌத்தம் பரவிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. இக்கட்டுரையின் நிறைவுப் பகுதியில் இந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்கிற தலைப்பில் பௌத்தம் வளர்ந்த வரலாறும் பௌத்தம் விழுந்த பின்னணியும் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலின் தொடக்கத்திலேயே சொன்னது போல மூன்று கருத்துக்களில் அல்லது தத்துவங்களில் பௌத்தம் அடங்கி உள்ளது என்ற செய்தியை நூலின் இறுதியிலும் ஆழமாக இந்நூல் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்: " மூன்று சொற்களில் பௌத்த மெய்யியல்களைச் சுருக்கிக் கூறிவிடலாம். அனைத்தும் துக்கம், அனாகமம் அதாவது நிலையாமை , நிறைவின்மை, ஆன்மா இன்மை ஆகிய மூன்றும் பௌத்தரது போதனையின் அடித்தளம் " என்று விளக்கிவிட்டு ஓரிடத்தில் பௌத்தம் காலங்காலமாக மாறாமல் பின்பற்றும் ஒரு தத்துவமாக அனாத்மக் கோட்பாடு உள்ளது என்பதைப் பின்வருமாறு விளக்குகிறார் : " புத்தர் மறைவுக்குப் பின் 2000 ஆண்டுகளாக பௌத்தர்களிடையில் பல கருத்து வேறுபாடுகள் தோன்றின. முதலில் 18 பிரிவுகள் இருந்தன. பின் மகாயானம் வந்தது.அதன் பின் வஜ்ராயணம் வந்தது .ஒவ்வொருவரிடையும் பல கருத்து மோதல்கள் ஏற்பட்டன. ஆனால் அனைவருக்கும் ஒரே கருத்தில் வேற்றுமை இருந்ததில்லை .அதுதான் அனாத்மா " ( ப.229 ) இந்நூலின் இன்றியமையாமை பற்றிச் சுருக்கச் சொன்னால் , இந்நூலின்றி வரும் பெளத்த ஆய்வு முழுமைபெற்றதாகாது எனலாம். எனவே, பெளத்தத்தை அறிந்துகொள்ள, புரிந்துகொள்ள, ஆய்ந்துசொல்ல, பின்பற்ற விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் பயிலவேண்டிய நூலாக இந்நூல் திகழ்கிறது. பதிப்பக முகவரி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41 - பி, சிட்கோ இண்டஸ்ட்ரி ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 600 098 இரண்டாம் அச்சு: ஜனவரி 2003 விலை : ரூ.75/- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid027RAnyYkBMm9GhwBjFTqiVMXk3waEu91vvqTUshHFjM6wozuVHD7Hf47iyhYhQYHHl&id=100007862881487&mibextid=Nif5oz

No comments:

Post a Comment