Sunday 29 January 2023

ஒரு நாள் ; ஒரு நூல் - 23. பெளத்தம் - ஒரு மார்க்சிய அறிமுகம் - தேவி பிரசாத் சட்டோபாத்யா+ 2, 23.01.2023

23.01.2023 ஒரு நூல் ; ஒரு நூல் - 23 பெளத்தம் - ஒரு மார்க்சிய அறிமுகம் - தேவி பிரசாத் சட்டோபாத்யா, இராம் விலாஸ் சர்மா, பென்கார்ட் - லெனின் பதிப்பாசிரியர்: வெ.கோவிந்தசாமி சென்னை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி) லிட்.,டின் முதல் பதிப்பாக டிசம்பர் 2012 இல் வெளிவந்த நூல் இது. இந்நூல் 84 பக்கங்கள் கொண்டது. மார்க்சிய ஒளி என்ற ஆய்விதழில் 1970 களில் வெளிவந்த நான்கு கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல் ஆகும். மார்க்சிய நோக்கில் பெளத்த சமயத்தைப் புரிந்து கொள்வதற்கான நல்ல அடித்தளத்தை அமைத்துத் தருவனவாக இக் கட்டுரைகள் திகழ்கின்றன. நூலின் முன்பகுதியில் பதிப்புரை, அணிந்துரை - எஸ்.பாலச்சந்திரன், பதிப்பாசிரியர் குறிப்பு ஆகியவை உள்ளன. இவற்றைத் தொடர்ந்து உள்ளளடக்கம் இடம்பெற்றுள்ளது. உள்ளடக்கத்தில் இந்நூலில் இடம்பெற்றுள்ள நான்கு கட்டுரைகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன: 1.ஆரம்ப பௌத்தத்தில் சில பிரச்சனைகள் - தேவி பிரசாத் சட்டோபாத்யா -தமிழில் : கா. சு. ரகுமணி - 11 2. புத்தர் போதனையின் சில தோற்றங்கள் - இராம் விலாஸ் சர்மா- தமிழில் : மு.அம்மையப்பன் - 45 3.நிலப் பிரபுத்துவம், வர்க்கம்,ஜாதி,தேசியம் - இராம் விலாஸ் சர்மா - தமிழில் : எஸ். நாராயணன் - 62 4.ஆரியப் பட்டரும் லோகாயதவாதிகளும் - பொன் கார்ட் லெவின் - தமிழில் : சாரதி - 76 இந்த நான்கு கட்டுரைகளில் முதல் இரண்டு கட்டுரைகள் புது தில்லி பீப்பிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டுள்ள Buddhism : A Marxist approach என்ற நூலில் இடம்பெற்றுள்ளவை ஆகும்.அடுத்த இரண்டு கட்டுரைகள் இந்த நூலிலே புதிதாக இணைக்கப்பட்டுள்ள கட்டுரைகள் ஆகும். இந்த நான்கு கட்டுரைகளில் முதல் இரண்டு கட்டுரைகளும் பௌத்தத்தை, அதன் மெய்யியலை, அதன் சமூகப் பின்புலத்தை, அதன் வரலாற்றுப் பின்புலத்தை, அதன் அரசியல் பின்புலத்தை அறிந்துகொள்ள துணை செய்யும் கட்டுரைகள் ஆகும். முதல் கட்டுரையான தேவி பிரசாத் சட்டோபாத்யாயா அவர்களின் கட்டுரை பௌத்தத்தை மார்க்சிய நோக்கில் எவ்வாறு புரிந்து கொள்வது? அவ்வாறு புரிந்து கொள்வதில் ஏற்படும் சிக்கல்கள் யாவை ? அச் சிக்கல்களை அவிழ்த்துக்கொள்ளும் நெறிமுறைகள் யாவை என்பது குறித்த ஆழமான சிந்தனைகளை, கேள்விகளை ஆராயும் கட்டுரையாக அமைந்துள்ளது. புத்தரைப் புரிந்துகொள்வதற்கு இரண்டு விதமான கண்ணோட்டங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஒன்று, அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய வீரர். இரண்டு, மேல் தட்டு வர்க்கமான பணக்காரக் கூட்டத்தோடு சென்று ஒட்டிக் கொண்டவர் என்று இருவேறு நோக்குகளில் ஆய்வுகள் நிகழ்ந்துவருகின்றன. இந்த இரண்டு நோக்க நிலைகளையும் மிக ஆழமாக , நுட்பமாக ஆய்வுசெய்து புதிய முடிவுகளை தருவதாக இந்த கட்டுரை அமைந்துள்ளது. மொத்தத்தில், மார்க்சிய நோக்கில் புத்தரின் வர்க்கச் சார்பு நிலை யாது என்பது குறித்த சிந்தனைகளை இந்தக் கட்டுரை விரிவாக ஆராய்ந்துள்ளது. பௌத்தத்தைச் சமூகவியல் பின்புலத்தில் வரலாற்று நோக்கில் ஆய்வுசெய்ய விரும்பும் எந்த ஒரு ஆய்வாளரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரையாக இந்தக் கட்டுரை திகழ்றது. இரண்டாவது கட்டுரையான இராம் விலாஸ் சர்மா அவர்களின் கட்டுரையும் மார்க்சிய நோக்கில் புத்தரின் போதனைகளை ஆராய்ந்து உள்ளது. புத்தரின் தத்துவத்தை உருவாக்கிக் கொள்வதற்கு அக் காலகட்டத்தில் இருந்த மற்ற மெய்யியல்கள் எந்த அளவிற்கு உதவியுள்ளன என்பதை நுட்பமாக இந்தக் கட்டுரை ஆராய்ந்து கூறுகிறது. எனவே, இந்தக் கட்டுரையும் பௌத்தத்தைச் சமூகவியல் நோக்கில் ஆராய விரும்பும் எந்த ஒரு ஆய்வாளரும் படிக்க வேண்டிய கட்டுரையாக அமைந்துள்ளது. இந்தக் கட்டுரைத் தொகுப்பில் மூன்றாவது , நான்காவது கட்டுரைகளாக அமைந்துள்ள இரண்டு கட்டுரைகளும் நேரடியாக பௌத்தத்தை ஆய்வு செய்யும் கட்டுரைகள் அல்ல என்ற போதிலும் சமூகவியல் பின்புலத்தில் அன்றைய காலத்துச் சமூகத்தை எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் அன்றைய காலத்துத் தத்துவ பின்புலங்கள் குறித்தும் அறிந்துகொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் தெளிந்துகொள்வதற்கும் பயன்படும் கட்டுரைகளாக அமைந்துள்ளன. இந்த இரண்டு கட்டுரைகளையும் படிப்பதன்மூலம் பௌத்தத்தை மட்டுமல்ல மானுட சமூக வரலாற்றுப் பின்புலத்தில் கருத்தியல்களை ஆராய்வதற்கு வழிகாட்டும் கட்டுரைகளாக அமைந்துள்ளன. இந்த அடிப்படைகளில் இந்த கட்டுரைத் தொகுப்பு மிகுந்த அறிவுப்பயன் அளிக்கும் கட்டுரைத் தொகுப்பாக அமைந்துள்ளது. பொதுவாக, தமிழில் இதுவரை நடந்துள்ள பௌத்த ஆய்வுகள் பெரும்பாலும் விளக்க ஆய்வுகளாகவும் பகுப்பாய்வுகளாகவுமே நடைபெற்று வருகின்றன. அவை பொருண்மை அடிப்படையில் தொகுக்கப்படும் பட்டியல் கட்டுரைகளாகவே பெரும்பாலும் அமைந்துவருகின்றன.இந்த ஆய்வுகள் சமூகவியல் பின்புலத்தில், மெய்யியல் பின்புலத்தில் திறக்கப்பட வேண்டியுள்ளன. அத்தகைய ஆய்வுகளை வளர்த்தெடுக்கும் போது புத்தம் புதிய ஆய்வு முடிவுகளை நாம் கண்டறிய முடியும். எனவே , பௌத்தம் குறித்த நுண்ணாய்வுகளுக்கு இந்தக் கட்டுரைத் தொகுப்பு ஒரு நல்ல வழிகாட்டும் தொகுப்பாக அமைந்துள்ளது. இத்தகைய நோக்கில் அதாவது மார்க்சிய நோக்கில் ஆய்வுசெய்கிறபோது வரலாற்று நோக்கில் ஒவ்வொன்றையும் தெளிவுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பு அமையும் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்யுள்ளது. எனவே, இந்த நூலைத் தொகுத்துப் பதிப்பித்த பதிப்பாசிரியர் வெ.கோவிந்தசாமி அவர்களும் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர்களும் இந்தக் கட்டுரைத் தொகுப்பை வெளியிட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் அதன் மேலாண் இயக்குநராகப் பணியாற்றும் தோழர் சண்முகம் சரவணன் அவர்களும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் ஆவர். பதிப்பக முகவரி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ( பி) லிட், 41- பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை - 98 முதல் பதிப்பு: டிசம்பர் 2012 விலை : ரூபாய் 65/- https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02UGyFbbVodyWyCCQhG5zG8wAafETxcmCvkCLRStzP347FWiegkjENVX2e8CPcn9ul&id=100007862881487&mibextid=Nif5oz

No comments:

Post a Comment