Wednesday 18 January 2023

ஒரு நாள்; ஒரு நூல் - 12. பெளத்தக் கலை வரலாறு - டாக்டர் ஜி.சேதுராமன், 12.01.2023

12.01.2023 ஒரு நாள் ; ஒரு நூல் - 12 பௌத்தக் கலை வரலாறு -- டாக்டர் ஜி சேதுராமன் இந்நூல் ஜெ.ஜெ. பப்ளிகேஷன்ஸ், மதுரை மூலமாக ஏப்ரல் 2006 இல் முதல் பதிப்பாக வெளிவந்துள்ளது. இந்நூல் 246+ 34 = 280 பக்கங்களைக் கொண்டுள்ளது. பௌத்தக் கலை வரலாறு என்னும் பொருண்மையில் தமிழில் முதன் முதலில் வெளிவந்த நூல் இந்நூல் என்பது இந்நூலுக்கு உரிய பெருமையும் சிறப்பும் ஆகும். இந்நூலைப் படைத்துள்ள டாக்டர் ஜி.சேதுராமன் அவர்கள் கடின உழைப்பு, சிறந்த தேடல், சிறந்த ஆய்வு அணுகுமுறை,சிறந்த ஆய்வு நெறிமுறை ஆகியவற்றோடு இந்நூலைப் படைத்தளித்துள்ளார். பௌத்தக் கலை வரலாறு குறித்து "தமிழில் ஒரு நூல் கூட இல்லை என்று பல ஆண்டுகளுக்கு முன்னர் என் மனதில் ஓர் ஆதங்கம் தோன்றியது.அதன் விளைவுதான் பௌத்தக் கலை வரலாறு என்னும் இச்சிறிய படைப்பு " என்று நூன்முகம் என்னும் பகுதியில் தன்னடக்கத்தோடு தெரிவித்துள்ளார். இந்நூலைப் பயில்கிற எவர் ஒருவரும் வியக்காமல் இருக்க முடியாது. இரண்டு விதமான வியப்புகள் இந்நூலைப் படிக்கிறபோது தோன்றுகிறது. பௌத்தக் கலை மரபு இத்தகைய பெருமையும் சிறப்பும் சீர்மையும் ஓர்மையும் அழகியலும் வாய்ந்ததா என்கிற வியப்பு, ஒன்று.இந்நூலை எவ்வளவு தரவுகளோடு,எவ்வளவு செறிவோடு, எவ்வளவு நுட்பமான விளக்கங்களோடு பேராசிரியர் படைத்தளித்துள்ளார் என்கிற வியப்பு, இன்னொன்று. இவ்வாறான வியப்பைத் தரக்கூடிய இந்நூலின் பொருளடக்க முறைமை பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளது: முன்னுரை 1.கட்டடக்கலை - 1 2. சிற்பக்கலை - 69 3.ஓவியக்கலை - 156 4.தமிழகத்தில் பௌத்தக் கலை - 186 5.ஆசிய நாடுகளில் பௌத்தக் கலை - 206 6.கலைச்சொல் விளக்கம் - 240 7.நோக்கு நூற்பட்டியல் - 244 நிழற்படங்கள் - 247 முன்னுரை என்னும் பகுதி இந்நூலைப் படிப்பதற்கான திறவுகோல்களைத் தருவதாக அமைந்துள்ளது. கட்டடக்கலை என்னும் முதல் இயல் மூன்று முக்கியப் பொருண்மைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பௌத்த கட்டடக் கலைச் சின்னங்கள் 3 வகைகளாக அமைந்துள்ளன. ஒன்று, ஸ்தூபம். இரண்டு, சைத்தியங்கள், மூன்றுவிகாரங்கள். இந்த மூன்று கட்டடக்கலை மரபுகளும் பௌத்தக் கட்டிடக்கலை மரபுகளில் எவ்வெவ்வாறு இடம் பெற்றுள்ளன,0இத்தகைய ஸ்தூபங்கள், சைதன்யங்கள், விகாரைகள் இந்தியா முழுவதும் எங்கெங்கெல்லாம் அமைக்கப்பட்டுள்ளன என்கிற செய்திகளை விரிவாகவும் செரிவாகவும் விளக்கி எழுதியுள்ளார். இரண்டாவது இயலான சிற்பக்கலை என்னும் இயலில் பௌத்தச் சிற்பக் கலைகள் எந்தெந்த ஆட்சி காலங்களில் உருவாக்கப்பட்டு இன்றைக்கு கிடைக்கின்றன என்ற செய்திகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. அவை முறையே,0மௌரியர் காலச் சிற்பங்கள், சுங்கர்,சாதவாகனர் காலச் சிற்பங்கள், குஷானர் காலச் சிற்பங்கள், குப்தர் காலச் சிற்பங்கள்,பிந்திய சாதவாகனர் காலச் சிற்பங்கள் என்றவாறு வரலாற்றுக் கால முறைமை அடிப்படையில் தொகுத்து எழுதியுள்ளார். மூன்றாவது இயலாத ஓவியக்கலை என்னும் தலைப்பில் ஓவியக்கலை இந்தியா முழுவதும் எங்கெங்கே உருவாக்கப்பட்டுள்ளன,0 அவற்றில் இடம்பெறும் பௌத்தக் கலை நுட்பங்கள் யாவை, அவை உணர்த்தும் செய்திகள்,கருத்துக்கள் ஆகியவை அழகுற விளக்கப்பட்டுள்ளன. ஓவியக்கலையும் வரலாற்றுக் கால நிரல்படி ஆராயப்பட்டுள்ளது. சாதவாகனர் காலம், குஷானர் காலம்,குப்தர் காலம் , வாகாடகர் காலம், பாலர், சேனர் காலம் என்றவாறு விரிவாக எழுதப்பட்டுள்ளது. நான்காம் இயலாமான தமிழகத்தில் பௌத்த கலை என்னும் தலைப்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றுள்ள பௌத்தக் கலை மரபுகள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன .காஞ்சி, காவிரிப்பூம்பட்டினம்,0 தென்னார்க்காடுபகுதி, புதுக்கோட்டை ,திருச்சி, தஞ்சாவூர் ,திருவாரூர்,நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள பௌத்த விகாரைகள், சிற்பங்கள், சிலைகள், செப்புத் திறமைகள் ஆகியவை தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் இயலான ஆசிய நாடுகளில் பௌத்த கலை என்னும் தலைப்பில் இலங்கை, நேபாளம், திபெத், பர்மா, ஜாவா, தாய்லாந்து, கம்போடியா ,சீனா, கொரியா உள்ளிட்ட 9 ஆசிய நாடுகளில் பரவி உள்ள பௌத்த கலை குறித்த செய்திகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலிலும் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை ஆகிய முப்பரிமாண நிலை இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு இயலிலும் ஒவ்வொரு கலைகளிலும் உள்ள கால அடிப்படையிலான வேறுபாடுகள், புதுமைக்கூறுகள், அழகியல் நுட்பங்கள் என்று இன்ன பிற கலை நுட்பக் கூறுகள், அவற்றின் தனித்தன்மைகள், பொதுமைக் கூறுகள் என்ற அடிப்படையில் மிக நுட்பமாக ,ஆழமாக, அழுத்தமாக, விரிவாக,செறிவாக எழுதப்பட்டுள்ளன. ஆங்காங்கே ஒவ்வொன்றையும் விளக்குகையில் அவை அதாவது பௌத்தக் கலை நுட்பங்கள் எவ்வாறு சைவ,வைணவ, சமணக் கலை மரபுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை மிக அழகாக விளக்கியுள்ளார் ஆசிரியர். கலை நுட்பக் கூறுகளில் ஒளிரும் மெய்யியல் பின்புலங்கள் ஆங்காங்கே விளக்கப்பட்டுள்ளவை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இந்நூலை இளம் ஆய்வாளர்கள் அவசியம் பயில வேண்டும். அவ்வாறு பயில்வார்களானால் இந்நூலில் இருந்து ஏராளமான ஆய்வுக் களங்களைக் கண்டறிய முடியும். அவர்களின் மேலாய்வுகளுக்கு இந்நூல் அரிய ஆய்வுக் கருவியாகப் பயன்படும் என்பது வெள்ளிடைமலை. மொத்தத்தில், இந்நூல் பெளத்த வரலாற்றுக் கலைக்களஞ்சியம் ஆகும். இந்நூலில் இடம்பெற்றுள்ள படங்கள் வண்ணப் படங்களாக இருந்தால் மிகவும் இரசனை தருவதாக இருக்கும். இந்நூலை ஏதேனும் ஒரு பதிப்பகம் மறுபதிப்பு செய்தால் நல்லது. இதுகுறித்து நூலாசிரியர் முயற்சி எடுக்கவேண்டும் என்று வேண்டுகிறேன். பதிப்பக முகவரி: J.J.Publications, 29, Karpaga Vinayagar Complex, K.Pudur, Madurai - 625 007 Ph . 0452-2565526 விலை.ரூ.124/-. https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0t3fPb7R9FcQuZzWz4JVKrAVNLK2TPNLCbPmqsJeeoSGep5Re5pdcJXXNHcMH9Yccl&id=100007862881487&mibextid=Nif5oz

No comments:

Post a Comment